இந்த மாதிரி தக்காளி விற்பனை செய்யுங்க… தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ ஐடியா!

தக்காளி விலை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டு வருகிறது. தமிழகத்தில் சில்லறை விற்பனையில் கிலோ 200 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களில் பெய்து வரும் பலத்த மழையால் தமிழகத்திற்கான வரத்து குறைந்ததே தக்காளி விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

முன்னதாக 302 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று முதல் 500 கடைகளில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. சொற்ப கடைகளில் மட்டுமே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருவதால் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளிலும் மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று தக்காளி வாங்கிச் செல்கின்றனர்.

தக்காளிக்காகவே ரேஷன் கடைகளில் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதால் காலை நேரத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப சிரமம் ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கும் மக்கள் கூடுதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த நிர்வாகியுமான செல்லூர் ராஜூ தக்காளி விற்பளை செய்வது குறித்து தமிழக அரசுக்கு ஐடியா கொடுத்துள்ளார். அதாவது, தக்காளியை தள்ளு வண்டிகளில் விற்பனை செய்ய தமிழக அரசு ஏற்பாடு செய்யலாம் என கூறியுள்ளார். தக்காளியை தெரு தெருவாக தள்ளு வண்டியில் கொண்டு சென்று விற்பனை செய்தால் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.