பள்ளிகளில் சீக்கிய மாணவர்கள் ‘கிர்பான்’ குறுவாள் வைத்துக் கொள்ள அனுமதி: தடையை நீக்கியது ஆஸ்திரேலிய நீதிமன்றம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்று, சீக்கிய மாணவர்கள் ‘கிர்பான்’ கத்தியை வைத்துக் கொள்ள தடை விதிக்கும் சட்டத்தை ரத்து செய்துள்ளது.

சீக்கியர்கள் தங்கள் மதநம்பிக்கையின் ஓர் அங்கமாக, எப்போதும் தங்களுடன் வைத்திருக்க வேண்டிய ஐந்து மத அடையாளங்களில் ஒன்றான கிர்பான் என்னும் குறுவாளுக்கு எதிரான தடை பாரபட்சமாக இருப்பதாகக் கூறி, கமல்ஜித் கவுர் அத்வால் என்பவர் கடந்த ஆண்டு குயின்ஸ்லேண்ட் மாகாண நிர்வாகத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சீக்கியர்கள் தங்கள் மத வழக்கப்படி கிர்பான் குறுவாளை எந்நேரமும் தங்களுடன் வைத்திருக்க வேண்டும். சீக்கியர்களின் இந்த வழக்கத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் அனுமதி அளித்துள்ளன.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் குயின்லேண்ட் மாகாணத்தில் கிர்பான் குறுவாளுக்கு தடை விதிக்கும் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இனப் பாகுபாடு சட்டத்தின் (RDA) கீழ் இந்த தடை அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளித்தனர்.

ஏற்கெனவே கீழ்மட்ட நீதிமன்றம் ஒன்று இந்த வழக்கை தள்ளுபடி செய்திருந்த நிலையில், மேல்முறையீட்டுக்குப் பிறகு சீக்கியர்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அமல்படுத்துவது குறித்து பரிசீலிப்பதாக குயின்ஸ்லேண்ட் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.