தமிழ்நாட்டில் வானிலை அடுத்த ஏழு தினங்களுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை சற்று ஓய்ந்த நிலையில் தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் மழை சற்று குறைந்துள்ளது. இருந்த போதிலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை ஒரு பக்கம் அடக்கி வாசிக்க, வெயில் அடித்து கொளுத்துவதால் மக்கள் உஷ்ணத்தால் அவதிக்கு உள்ளாகின்றனர். இன்றும் நாளையும் (ஆகஸ்ட் 7, 8) தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அதிகபட்சமாக 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மஞ்சளார் அணையின் நீர்மட்டம் 47 அடியாக சரிவு
சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நாளை ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை இன்று அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும்.
நாளை (ஆகஸ்ட் 8)அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று ஒரு சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கொள்ளிடம் 6, வேப்பூர், திருமயம், வடகுத்து, புலிப்பட்டி பகுதிகளில் 5, ஈச்சன் விடுதி, பரங்கிப்பேட்டை 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நேற்று அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் பகுதியில் 41.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.