அமலாக்கத்துறை வைத்த மெகா 'செக்'.. செந்தில் பாலாஜி சகோதரரின் மனைவிக்கு சம்மன்..

சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி காவலில் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சகோதரரான அசோக் குமாரின் மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, தனது துறையில் பணி நியமனங்களுக்கு கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விரைந்து முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், கடந்த ஜுன் மாதம் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்.

இதில் கைப்பற்றப்பட்ட பல ஆவணங்கள் மூலம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதை அமலாக்கத்துறையினர் உறுதி செய்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்னர் நெஞ்சு வலி படலங்களுக்கு பிறகு கடந்த மாதம் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், நீதிமன்ற அனுமதியின் பேரில் கடந்த திங்கட்கிழமை அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்துள்ளனர். அவரிடம் விடிய விடிய விசாரணை நடந்து வருதவதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கரூரில் கட்டி வரும் பங்களா வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தினர். ஏற்கனவே அசோக் குமாருக்கு 4 முறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகாமல் தலைமறைவாக இருக்கும் நிலையில், இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதனிடையே, இந்த பங்களாவானது அசோக் குமாரின் மனைவி நிர்மலாவின் பெயரில் உள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, நிர்மலாவை நேரில் ஆஜராகுமாறு கூறி அவருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

முதலில், செந்தில் பாலாஜியை டார்கெட் செய்து வந்த அமலாக்கத்துறை, தற்போது அவரது குடும்பத்தினரையும் குறி வைத்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.