அரசு, தனியார் பள்ளிகளில் வந்தது தடை… பெற்றோர்கள், மாணவர்களுக்கு அலர்ட்… டெல்லி அரசு அதிரடி!

மொபைல் போன்கள் நமது அன்றாட வாழ்வில் மிகவும் அத்தியாவசியமான தொழில்நுட்பமாக மாறிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, சிறு வியாபாரிகள் முதல் தொழிலதிபர்கள் வரை, மாணவர்கள் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை என அனைவரது கைகளிலும் மொபைல் போன் தவழ ஆரம்பித்துவிட்டது. அதேசமயம் இத்தகைய தொழில்நுட்பத்திற்கு அதிகப்படியான நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும்.

மொபைல் போன் பயன்பாடு

இல்லையெனில் மன அழுத்தம், தனிமைப்படுதல், உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, கண் பார்வை குறைபாடு போன்ற குறைபாடுகள் ஏற்படும். பிறரிடம் முகம் கொடுத்து பேசுவதையே பெரிதும் குறைத்து கொள்ள நேரிடும். இது ஆரோக்கியமான சமூகத்திற்கு வழிவகுக்காது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

பள்ளிகளில் மொபைல் போன்

குறிப்பாக பள்ளிகளில் மாணவர்கள் மொபைல் போன் பயன்படுத்தினால், அவர்களின் கவனம் சிதறும் எனக் கூறப்படுகிறது. எனவே தான் கல்வி கற்கும் இடங்களில் மொபைல் போன் வேண்டாம் எனப் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வழிகாட்டுதல்களை, கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

டெல்லி அரசு வெளியிட்ட அறிவிப்பு

இந்நிலையில் டெல்லி அரசு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அம்மாநில கல்வித்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பள்ளிக்கு மாணவர்கள் மொபைல் போன் கொண்டு வராமல் பார்த்து கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமை. பள்ளி வளாகங்களில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது.

மொபைல் போன் பயன்பாடு

ஒருவேளை மொபைல் போன்களை கொண்டு வந்தால் அவற்றை பாதுகாப்பு பெட்டகம் அல்லது வேறு ஏதாவது ஒரு லாக்கரில் கொண்டு போய் வைத்துவிடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் பணியாற்றும் பிற ஊழியர்களுக்கும் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வகுப்பறைகள் டூ நூலகங்கள் வரை

மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் போதும், கல்வி சார்ந்த பிற நடவடிக்கைகளின் போதும் மொபைல் போன்களை ஆசிரியர்கள் பயன்படுத்தக் கூடாது. உதாரணமாக சொல்ல வேண்டுமெனில் வகுப்பறைகள், விளையாட்டு மைதானங்கள், ஆய்வகங்கள், நூலகங்கள் உள்ளிட்டவற்றில் மொபைல் போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவசரகால தொலைபேசி எண்

மேலும் ஒவ்வொரு பள்ளியும் அவசர கால தொடர்பு தொலைபேசி எண்ணை பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏதாவது அவசரம், ஆபத்து, மிக மிக முக்கியம் என்றால் சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ள முடியும்.

கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவு

மேற்கண்ட அனைத்து தகவல்களையும் அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது நிர்வாகத்தினர் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உரிய முறையில் தெரியப்படுத்த வேண்டும். இதையொட்டி தேவையான முன்னேற்பாடுகளை விரைவாக மேற்கொண்டு அமல்படுத்த வேண்டும் என்று டெல்லி கல்வித்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.