திரிஷாவின் மலையாள படத்தில் வில்லன் ஆனார் வினய் ராய்

சினிமாவில் அறிமுகமாகும்போதே சாக்லேட் ஹீரோ என்கிற இமேஜை பெற்ற நடிகர்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஹீரோ வாய்ப்பு கிடைக்காத நிலையில் அப்படியே திரையுலகை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்விடுவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. இதில் விதிவிலக்காக ஒரு சில ஹீரோக்கள் பாதையை மாற்றி திரையுலக பயணத்தை வேறு விதமாக தொடர்வார்கள். அப்படி ஒரு நடிகர் தான் வினய் ராய். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சாக்லேட் ஹீரோவாக அறிமுகமான வினய் ராய் ஒரு கட்டத்தில் கதாநாயகன் வாய்ப்பு குறைந்ததும் தனது பாதையை வில்லன் ரூட்டிற்கு மாற்றினார்.

இந்த இரண்டாவது இன்னிங்ஸில் துப்பறிவாளன், எதற்கும் துணிந்தவன், டாக்டர் என முன்னணி நடிகர்களின் படங்களின் ஹைடெக் வில்லனாக தொடர்ந்து நடித்து வருகிறார். இதை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான கிறிஸ்டோபர் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் வினய் ராய்.

இந்த நிலையில் மலையாளத்தில் தற்போது டொவினோ தாமஸ், திரிஷா இணைந்து நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் வினய். என்றென்றும் புன்னகை படத்தை தொடர்ந்து திரிஷவும் வினய்யும் இந்தப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற சைக்கோ கிரைம் திரில்லர் படமான பாரன்சிக் என்கிற படத்தை இயக்கிய அனாஸ்கான் மற்றும் அகில் பால் இருவரும் தான் இந்த படத்தையும் இயக்க உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.