புதுடில்லி:தலைநகர் டில்லியில் வளர்ச்சிப் பணிகளுக்காக 200 மரங்களை இடமாற்றம் செய்ய துணை நிலை கவர்னர் சக்சேனா நேற்று ஒப்புதல் அளித்தார்.
இதுகுறித்து, டில்லி ராஜ்நிவாஸ் அதிகாரிகள் கூறியதாவது:
புதுடில்லி மோதி பாக் பகுதியில் உள்ள அரக்பூரில் வடக்கு ரயில்வே சார்பில் ஒரு லட்சத்து 36,000 சதுர அடி பரப்பளவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்காக அங்குள்ள 96 மரங்களை இடமாற்றம் செய்ய அனுமதி கோரப்பட்டது.
அதற்கு துணை நிலை கவர்னர் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார்.
அதேபோல அசோகா சாலையில் ஒரு லட்சத்து 96,000 சதுர அடி பரப்பளவில் மத்திய செயலக கட்டிடம் கட்டுவதற்காக 107 மரங்களையும் இடமாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
வடக்கு ரயில்வே குடியிருப்புக்காக ஆறு மாதங்களிலும், மத்திய செயலக கட்டிடத்துக்காக மூன்று மாதங்களிலும் மரங்களை இடமாற்றம் செய்ய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரிந்துரை செய்திருந்தார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிஷிக்கு கூடுதல் பொறுப்பு
டில்லி அரசின் கல்வி, பொதுப்பணி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சுற்றுலா, வருவாய், நிதி மற்றும் திட்டம் ஆகிய துறைகளின் அமைச்சராக பதவி வகிப்பவர் அதிஷி சிங் மர்லேனா. இவரிடம், சேவை மற்றும் ஊழல் தடுப்புத் துறை ஆகியவற்றை கூடுதலாக ஒப்படைக்க, முடிவு செய்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அதற்கான கோப்புகளை, துணைநிலை கவர்னர் சக்சேனா ஒப்புதலுக்கு சமீபத்தில் அனுப்பினார். முதல்வரின் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட கவர்னர் சக்சேனா நேற்று மாலை ஒப்புதல் அளித்துள்ளார். டில்லி அமைச்சரவையில் உள்ள ஒரே பெண் அமைச்சர் அதிஷி என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement