விரைவு போக்குவரத்து கழகத்தில் 685 ஓட்டுநர் – நடத்துநர் பணி: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநர்-நடத்துநர் பணியிடங்களுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு 2013-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்கள் உள்ளன.

இந்தப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பல ஆண்டுகளாக தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து, நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 6 போக்குவரத்துக் கழகங்களில் உள்ள ஓட்டுநர் – நடத்துநர் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக விரைவு போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள டிசிசி (ஓட்டுநர் நடத்துநர் பணியை ஒருசேர மேற்கொள்வோர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

இதில் நிர்வாக இயக்குநர் கே.இளங்கோவன் கூறியிருப்பதாவது: அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்றுசட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 685 டிசிசி (ஓட்டுநர் – நடத்துநர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

இணையதளத்தில் விண்ணப்பம்: இன்று (ஆக.18) பிற்பகல் 1 மணிமுதல் செப்.18-ம் தேதி பிற்பகல் 1மணி வரை ww.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அரசுவிரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் டிசிசி (ஓட்டுநர் – நடத்துநர்) பதவிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இப்பதவிக்கான நியமனம் முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும். தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்படும். தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் உடன் நடத்துநர் திறன்தேர்வு (செய்முறை) மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.