தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையத் தலைவர் பதவி நிரப்பபடாமல் உள்ள நிலையில் அந்தப் பதவியில் ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபுவை கொண்டு வரும் முயற்சிகள் நடைபெற்றன.
ஜூன் 30 ஆம் தேதியுடன் டிஜிபி சைலேந்திரபாபு பணி ஓய்வு பெற்ற நிலையில் அவரது அனுபவத்தையும், திறமையையும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஏதேனும் ஒரு பதவி கொடுத்து அவரைத் தக்க வைக்க திட்டமிட்டது.
தலைமைச் செயலாளராக இருந்த இறையன்புவும் பணி ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கும் முக்கிய பணி ஒன்றை கொடுக்க தமிழக அரசு முன்வந்தது. தலைமை தகவல் ஆணையர், டிஎன்பிஎஸ்சி தலைவர் இவற்றில் ஏதேனும் ஒன்றில் இறையன்பு வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறையன்புவோ அதை மறுத்து விட்டு பணி ஓய்வு பெற்று, எழுத்து, பேச்சு ஆகியவற்றில் மீண்டும் கவனம் செலுத்த திட்டமிட்டார்.
இதனால் டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபுவை கொண்டு வருவதற்கான பணிகள் வேகமெடுத்தன. அதற்கு அவரும் சம்மதிக்க டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு அவரது பெயரும் உறுப்பினர்கள் பதவிக்கு சிலரது பெயர்களும் தமிழக அரசின் சார்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
‘அமைச்சர் பதவி போனா போகட்டும்’ – மேடையில் தில்லாக பேசிய உதயநிதி
தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றும் மசோதாக்களை கிடப்பில் போட்டு தமிழக அரசுக்கு குடைச்சல் கொடுத்து வரும் ஆர்.என்.ரவி இந்த பரிந்துரையையும் கிடப்பில் போட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
இந்த பரிந்துரை தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி அதை திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர். அவற்றுக்கு உரிய விளக்கங்களை அளித்து தமிழக அரசு மீண்டும் அனுப்பியுள்ளது. அதன் பின்னரும் ஒப்புதல் அளிக்காமல் அதை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை நீட் விவகாரத்தில் தொடர்ந்து விமர்சித்து வருவதால் தனது கோபத்தை இவ்வாறு காட்டுகிறார் என்றும் கூறுகின்றனர்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று நடைபெற்ற நீட் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் உணர்ச்சிகரமாக பேசினார். உதயநிதி அரசியல் மேடைகளில் இதற்கு முன் இவ்வளவு உணர்ச்சிகரமாக பேசியது இல்லை. அந்த பேச்சில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தான் முழுக்க முழுக்க வறுத்தெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.