சண்டிகர்: ஹரியணாவின் நூ மாவட்டத்தில் கடந்த ஜூலை 31-ம் தேதி நடைபெற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) ஊர்வலத்தின்போது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு 2 சமூகத்தினரிடையே மதக் கலவரம் மூண்டு பெரிய கலவரமாக மாறியது.
இந்தக் கலவரம் அருகிலுள்ள குருகிராம் மாவட்டம் சோனா நகருக்கும் பரவியதால் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில், வரும் 28-ம் தேதி (நாளை) இந்துத்துவா அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நூ மாவட்டத்தில் ஊர்வலம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இருந்த போதும் ஊர்வலத்தை நடத்துவோம் என்று அந்த அமைப்பினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு கருதி நூ மாவட்டத்தில் செல்போன் இணைய சேவை மற்றும் மொத்தமாக அனுப்பும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கு 2 நாள்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்று (ஆகஸ்ட் 27) பகல் 12 மணி முதல் நாளை(ஆகஸ்ட் 28) நள்ளிரவு 12 மணி வரை இணைய சேவை துண்டிக்கப்படும் என்று நூ மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் தவறான தகவல் மற்றும் வதந்திகள் பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.