ODI கிரிக்கெட் உலகக் கோப்பை இன்னும் சில மாதங்களுக்குப் பிறகு அதாவது அக்டோபர்-நவம்பரில் இந்தியாவில் நடத்தப்படுகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இறுதிப் போட்டி நவம்பர் 19 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பிரபல ஜோதிடர் மகரிஷி தத்தராஜன் கிரிக்கெட் குறித்து தன்னுடைய பெரிய கணிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார். இந்த முறை ஆஸ்திரேலியா அல்லது பாகிஸ்தானை கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீழ்த்தி கோப்பையை வெல்லும் எனக் கூறியுள்ளார்.
ஜோதிடர் மகரிஷி தத்தராஜன் 2002 ஆம் ஆண்டில் ஒரு கணிப்புச் செய்தார், அது சரியானது. அதாவது, மத்தியப் பிரதேசத்தில் பெண் ஒருவர் முதலமைச்சராக வருவார் என்று தெரிவித்தார். அவர் கூறிய கணிப்புக்குப் பிறகு உமாபாரதி 2003-ம் ஆண்டு மத்தியப் பிரதேச முதல்வராக பதவியேற்றார்.
கிரிக்கெட் பற்றிய கணிப்புகள்
இந்த முறை கிரிக்கெட் பற்றி கணித்த பாபா, 2023ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் நிலையில், அதனை இந்திய கிரிக்கெட் அணியே வெல்லும் என தெரிவித்துள்ளார். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அல்லது பாகிஸ்தான் அணிகள் வர வாய்ப்பு இருப்பதாகவும் அந்த அணிகளை இந்தியா வீழ்த்தும் என்று கூறியுள்ளார். விராட் கோலி பற்றி கூறுகையில் அவர் 2 சதங்களுக்கு மேல் அடிக்கமாட்டார் என தெரிவித்திருக்கிறார்.
ரோகித் சர்மா பற்றி பாபா கூறியது என்ன?
ரோஹித் ஷர்மாவைப் பொறுத்தவரை, ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்படுவார் என தெரிவித்துள்ளார். பேட்டிங்கில் சிறப்பாக ஆடி நல்ல சராசரி வைத்திருந்தாலும் 2 சதங்களுக்கு மேல் அவரும் அடிக்கமாட்டார் என கூறியிருக்கிறார். அவருடைய கணிப்பில் இந்திய அணியில் 5க்கும் மேற்பட்ட புதிய வீரர்கள் விளையாடுவார்கள். அவர்களில் ‘ஆர்’ ‘கே’ ‘எஸ்’ என்ற பெயர் கொண்ட வீரர்கள் மட்டுமே நன்றாக விளையாடுவார்கள் என தெரிவித்திருக்கிறார்.
இந்தியா – பாகிஸ்தான் மோதல்
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அக்டோபர் 14 ஆம் தேதி நடைபெறுகிறது. நவம்பர் 19 ஆம் தேதி இந்த உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. ஓடிஐ உலகக் கோப்பைக்கு 100 நாட்களுக்கு முன்னதாக ஐசிசி அட்டவணையை அறிவித்தது. உலக கோப்பையை நடத்தும் இந்தியா, ஐந்து முறை உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் தன்னுடைய முதல் போட்டியில் விளையாட உள்ளது.
இந்த உலகக் கோப்பையில் 10 அணிகள்
இம்முறை மேற்கிந்திய தீவுகள் அணி இல்லாமல் உலக கோப்பை நடைபெறுகிறது. ஐசிசி உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக மேற்கிந்திய தீவுகள் அணியை போட்டியில் காண முடியாது. குவாலிஃபையர் போட்டிகளில் சிறிய அணிகளிடம் தோற்று வெளியேறியது அந்த அணி. ஜிம்பாப்வேயின் உலக கோப்பை கனவும் தகர்ந்தது. இப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் நெதர்லாந்து என மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.