பட வெளியீடுகளை தீர்மானிக்கும் ஓடிடி நிறுவனங்கள்

தமிழ் சினிமாவில், ஏன் இந்திய சினிமாவிலேயே கடந்த சில வருடங்களில் புதிய படங்களின் வெளியீடுகளை அப்படங்களின் தயாரிப்பாளர்களோ, இயக்குனர்களோ, நடிகர்களோ தீர்மானிப்பதில்லை. அந்தப் படங்களை வாங்கும் ஓடிடி நிறுவனங்கள் தீர்மானிக்கிறது எனச் சொல்கிறார்கள்.

இந்தியாவில் தற்போது அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், ஜீ 5, சோனி லிவ், ஆஹா உள்ளிட்ட ஓடிடி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் அதிகமான படங்களை போட்டி போட்டு வாங்குவதில் அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் ஆகிய நிறுவனங்கள் முன்னணியில் உள்ளன. இந்த நிறுவனங்கள் சக போட்டி நிறுவனங்களில் எப்போது எந்தப் படங்கள் வெளியாகிறது, தாங்கள் எப்போது படங்களை வெளியிட வேண்டும் என ஒரு திட்டமிடலுடன் செய்து வருகிறார்களாம்.

ஒரு புதிய படம் தியேட்டர்களில் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. ஒரே நாளில் ஒரே மொழியில் இரண்டு, மூன்று படங்களை எந்த ஓடிடி நிறுவனமும் வெளியிடுவதில்லை. அதற்கனெ சில வரைமுறைகளை வைத்திருக்கிறார்களாம். எனவே, அவற்றையும் கணக்கில் கொண்டு தயாரிப்பாளர்களிடம் இந்த நாளில்தான் படங்களை வெளியிட வேண்டும் என ஒப்பந்தம் போடுகிறார்களாம். ஓடிடி நிறுவனங்கள் தரும் பெரும் தொகை தான் தயாரிப்பாளர்களுக்கு பெரும் சுமையைக் குறைக்க உதவுவதால் அதற்கு அவர்களும் ஒத்துழைக்கிறார்களாம்.

பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போனதற்கும் ஓடிடி நிறுவனம்தான் காரணம் என்கிறார்கள். விஜய் நடிக்கும் 'லியோ' படத்திற்குக் கூட 'எல்சியு' இருந்தால் படத்தில் கூடுதல் தொகை, 'எல்சியு' இல்லை என்றால் அந்தத் தொகை 'கட்' என்றுதான் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்களாம். 'எல்சியு' என்பது 'லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்'. தனது படம் தனித்து இருக்க வேண்டும் முந்தைய லோகேஷ் படங்களின் 'எல்சியு' என்பது 'லியோ' படத்தில் இருக்கக் கூடாது என விஜய் கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம். ஆனால், எப்படியாவது விஜய்யைப் பேசி சம்மதிக்க வைக்கலாம் என இன்னமும் பேசி வருகிறார்களாம்.

ஓடிடி நிறுவனங்களின் அதிகாரம் தற்போதைய தமிழ் சினிமாவில் அதிகமாகவே இருக்கிறது என்பதுதான் உண்மை. மேலும், முக்கிய நடிகர்களின் படங்களைத் தவிர மற்ற நடிகர்களின் படங்களை அந்நிறுவனங்கள் கண்டு கொள்வதில்லை என்பதும் பல தயாரிப்பாளர்களின் வருத்தமாக உள்ளது. அதற்கு எந்த சங்கங்களும் பேச்சு வார்த்தைகளையும் நடத்தவில்லை என சிறு தயாரிப்பாளர்கள் மனக் குமுறலுடன் தெரிவிக்கிறார்கள். ஓடிடி நிறுவனங்களின் ஆக்கிரமிப்பிலிருந்து தமிழ் சினிமா தற்போதைக்குத் தப்பிக்க முடியாது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.