திரிஷா-டொவினோ இல்லாமலேயே துவங்கிய ‛ஐடென்டிட்டி' படப்பிடிப்பு

கடந்த சில வருடங்களுக்கு முன்பு நிவின்பாலியுடன் ஹே ஜூடு என்கிற படத்தில் நடித்ததன் மூலம் மலையாள திரை உலகில் அடியெடுத்து வைத்தார் திரிஷா. அதைத்தொடர்ந்து ஜீத்து ஜோசப்-மோகன்லால் கூட்டணியில் உருவான ராம் படத்தில் கதாநாயகியாக நடித்தார். பாதிப்படம் முடிவடைவதற்குள் கொரோனா தாக்கம் காரணமாக நிறுத்தப்பட்ட அந்த படம் தற்போது வரை மீண்டும் துவங்கப்படாமலேயே இருக்கிறது.

தற்போது மலையாள திரையுலகின் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகரான டொவினோ தாமஸுடன் இணைந்து ‛ஐடென்டிட்டி' என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் திரிஷா. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சைக்கோ திரில்லர் படமாக வெளியான 'பாரன்ஷிக்' படத்தை இயக்கிய அகில்பால் – அனாஸ்கான் என்கிற இரட்டை இயக்குனர்கள் தான் இந்தப் படத்தை இயக்குகின்றனர். இந்த படத்தில் பாலிவுட் நடிகை மந்த்ரா பேடியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் டொவினோ தாமஸ், திரிஷா இருவரும் இல்லாமலேயே மந்த்ரா பேடி நடிக்கும் காட்சிகளை முதலில் படமாக்க துவங்கி விட்டனர் ஐடென்டிட்டி இயக்குனர்கள். மொத்தம் ஏழு கட்ட படப்பிடிப்பாக 120 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இனிவரும் அடுத்தகட்ட படப்பிடிப்புகளில் திரிஷா மற்றும் டொவினோ தாமஸ் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.