நவராத்திரி திருவிழாவிற்காக பிரதமர் மோடி, குஜராத்தி மொழியில் எழுதிய பாடல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி நவராத்திரி விழாவுக்காக இந்தப் பாடலை எழுதியிருக்கிறார். கர்பா வகை பாடலான இது ‘மாடி’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி எழுதிய பாடலின் வரிகளைப் பாடகி த்வனி பனுஷாலி பாடியிருக்கிறார். ‘மீட் பிரதர்ஸ்’ என்றழைக்கப்படும் மன்மீத் சிங், ஹர்மீத் சிங் இதற்கு இசையமைத்திருக்கின்றனர். வண்ணமயமான காட்சிகளுடன் ரசிக்கும் விதமாக உள்ள கர்பா பாடல் கலாசாரத்தின் பன்முகத்தன்மை, ஒற்றுமை ஆகியவற்றை எடுத்துரைப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்பாடலை இசையமைத்த மன்மீத் சிங் மற்றும் ஹர்மீத் சிங் இருவரும் நரேந்திர மோடியுடன் பணிபுரிந்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் பேசுகையில், “பிரதமர் மோடி எங்களுக்கு மிகவும் பிடித்தவர், நாங்கள் அவரை மிகவும் மதிக்கிறோம், நேசிக்கிறோம். அவர் உலகின் மிகவும் பிரபலமான ஆளுமைகளில் ஒருவர். இரண்டு நாள்களில் இந்தப் பாடல் இசையமைக்கப்பட்டது.
இசைக்கு ஏற்ப பாடல் வரிகளில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டபோது மோடி அவர்களே தானாக முன் வந்து பாடல் வரிகளில் மாற்றங்களைச் செய்தார். ஒரு தேர்ந்த எழுத்தாளருடன் பணியாற்றியது போலத்தான் உணர்ந்தோம். அவரைப் பற்றி உலகம் அறியாத ஒரு புதிய பக்கம் இருக்கிறது. அவரின் அந்தப் பக்கத்தைப் பார்த்த அதிர்ஷ்டசாலிகள் நாங்கள்” என்று பகிர்ந்திருக்கின்றனர்.
As the auspicious Navratri dawns upon us, I am delighted to share a Garba penned by me during the past week. Let the festive rhythms embrace everyone!
I thank @MeetBros, Divya Kumar for giving voice and music to this Garba.https://t.co/WqnlUFJTXm
— Narendra Modi (@narendramodi) October 15, 2023
இந்தப் பாடல் குறித்து பிரதமர் மோடி தனது X பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “இந்தப் பாடல் எனக்குப் பல நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது. நான் பல ஆண்டுகளாக எழுதவில்லை. தற்போது வெளியாகியுள்ள இந்தப் பாடல் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதாகும். என்று பதிவிட்டிருந்தார்” என்பது குறிப்பிடத்தக்கது. 4:40 நிமிடங்கள் ஓடும் இந்தப் பாடல், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.