லியோ வெற்றி விழாவுக்கும் வந்த சோதனை: அனுமதி கிடைப்பதில் சிக்கல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் கடந்த அக்.,19ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இப்படம் 10 நாட்களில் உலகளவில் 500 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்துவதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு உள்ளிட்ட சில காரணங்களால் இசை வெளியீட்டு விழாவை படதயாரிப்பு நிறுவனம் ரத்து செய்தது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், தற்போது ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக அதே நேரு உள்விளையாட்டு அரங்கில், லியோ படத்தின் வெற்றி விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டது.

அதன்படி, படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் பெரியமேடு போலீஸ் ஸ்டேஷனிற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில் ‛லியோ படத்தின் வெற்றி விழாவை வரும் நவம்பர் 1ம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் கொண்டாட இருக்கிறோம். விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார். எனவே பாதுகாப்பு வழங்குமாறு' கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த கடிதத்திற்கு போலீஸ் தரப்பில் பதில் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ‛விழா எத்தனை மணிக்கு தொடங்கி எத்தனை மணிக்கு முடியும், எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன, போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் தனியார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா? முக்கிய விருந்தினர்கள் யார் யார் கலந்து கொள்கிறார்கள்?' என கேள்வி எழுப்பியதுடன், விழாவுக்கு 5000 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

இந்த கடிதம் போலீசின் பரிசீலனையில் உள்ள நிலையில் லியோ வெற்றி விழா கொண்டாட்டத்திற்கான விண்ணப்பத்தை நேரு உள்விளையாட்டரங்க அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். நேரு விளையாட்டு அரங்கின் விதிகளின் படி நிகழ்ச்சி நடத்துவதற்கு 10 நாட்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டுமாம். ஆனால் லியோ படத் தயாரிப்பு நிறுவனம் 3 நாட்களுக்கு முன்பாகத் தான் நிகழ்ச்சிக்காக விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளனர். இதனால் தயாரிப்பு நிர்வாகம் எடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறது.

லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பு பல சிக்கல்களை கடந்து வெளியான நிலையில், படம் வெளியாகியும் சிக்கல்கள் தொடர்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.