'பருத்தி வீரன்' பஞ்சாயத்து முழு கணக்கு விவரம்…

அமீர் இயக்கத்தில், கார்த்தி, பிரியாமணி மற்றும் பலர் நடிப்பில் 2007ல் வெளிவந்த படம் 'பருத்தி வீரன்'. கார்த்தி நடித்து சமீபத்தில் வெளிவந்த 'ஜப்பான்' படம் அவருடைய 25வது படமாக அமைந்தது. அதற்காக நடைபெற்ற 'கார்த்தி 25' விழாவில் அமீரை அழைக்காதது குறித்து ஆரம்பமான சர்ச்சை அப்படியே 'பருத்தி வீரன்' பக்கம் போய்விட்டது.

அப்படத்தின் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா அளித்த ஒரு பேட்டியில், அமீர் அதிகமான பட்ஜெட்டில் படத்தை முடித்துக் கொடுத்தார் என ஒரு கணக்கு சொன்னார். படத்தின் முதல் பிரதியைத் தயாரித்துக் கொடுப்பதற்காக 2 கோடியே 75 லட்சம் ரூபாய் தருவதாக பேசினோம். ஆனால், அமீர் படத்தை முடித்தபின் 4 கோடியே 85 லட்ச ரூபாய் தர வேண்டும் எனக் கேட்டதாகச் சொன்னார்.

அமீர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் வேறு ஒரு கணக்கு சொல்லியிருக்கிறார். படத்தின் மொத்த பட்ஜெட் 5 கோடியே 30 லட்சம். அப்படத்திற்காக அமீர் செலவு செய்த தொகை 1 கோடியே 15 லட்ச ரூபாய். தயாரிப்பாளர் சங்கத்தில் அப்போது நடந்த பேச்சுவார்த்தையின்படி அவர்கள் வாங்கித் தருவதாகச் சொன்ன தொகை 80 லட்ச ரூபாய். ஆனால், தனக்கு 1 கோடி ரூபாய் வேண்டுமென நீதிமன்றத்தில் அமீர் வழக்கு தொடர்ந்து அது கடந்த 17 வருடங்களாக நடந்து வருகிறது.

இப்படத்தில் நான் கூடுதலாக செலவு செய்தது குறித்து சிவகுமார் அவர்கள் குடும்பத்திலிருந்து யாராவது ஒருவர் அழைத்துப் பேசியிருந்தாலே இப்பிரச்சனை முடிந்திருக்கும். ஒரு கோடி ரூபாய் என்பது எனக்கும் பெரிய பிரச்சனை அல்ல, அவர்களுக்கும் பெரிய பிரச்சனை அல்ல. ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தில் தான் ஒரு குற்றவாளியாக 30 நாட்கள் நிறுத்தப்பட்டேன். அப்போது எனக்கு ஆதரவாக ஒருவர் கூட வரவில்லை. அந்த நாட்களை நான் மரணிக்கும் வரை மறக்க முடியாது. எனக்கான நீதி கிடைக்க வேண்டும் என்றுதான் போராடிக் கொண்டிருக்கிறேன் என்று பேசியுள்ளார்.

இயக்குனர் பாராதிராஜா முதல் அப்படத்தில் குட்டிச்சாக்கு கதாபாத்திரத்தில் நடித்தவர் வரை அமீருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளனர். சிவகுமார் குடும்பத்தினர் இந்த விவகாரத்திற்கு சீக்கிரம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க மாட்டார்களா என்றுதான் சினிமா ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.