இந்திய உயர்ஸ்தானிகர் சபாநாயகரை சந்தித்தார்

சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு வெளியேறவுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று (28) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

கடந்த காலங்களில் இலங்கை முகங்கொடுத்த பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு முன்வந்த முதலாவது நாடு இந்தியா என்றும், அதற்காக தனது நன்றிகளை தெரிவிப்பதாகவும் சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார். அத்துடன், தனது சேவைக்காலத்தில் இலங்கை – இந்திய தொடர்புகளை விருத்தி செய்வதற்கு இந்திய உயர்ஸ்தானிகர் வழங்கிய அனைத்து ஒத்துழைப்புக்களுக்கும் சபாநாயகர் நன்றியைத் தெரிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதாகவும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா சாதகமான நிலையில் உள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.