`மழை பாதிப்பு; 4,435 பள்ளிகளில், 32 பள்ளிகளில் பணிகள் செய்ய வேண்டியிருக்கிறது' – அன்பில் மகேஸ் தகவல்

புதுக்கோட்டை நகரப் பகுதிக்குட்பட்ட எஸ்.எஸ் நகரில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன மையத்தில், ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ என்ற திட்டத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு அனைத்து பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை நிகழ்ச்சி

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி என்ற திட்டம், 2021-ம் ஆண்டு சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், பூம்புகாரில் தொடங்கப்பட்டு இன்றைய தினம் புதுக்கோட்டையிலும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவர்கள் இதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்கள் 15 தினங்கள் இங்கேயே தங்கியிருந்து, பயிற்சி பெறுவதுடன், பள்ளிக்கூடத்துக்குச் செல்லும்போது அந்தப் பாடத்திலும் அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கோடு, அதையொட்டியே இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இது போன்ற பயிற்சி பெரிய பெரிய மாநகராட்சிகள், நகரங்களில் மட்டும்தான் செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது கிராமப்புறப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு, இதைச் செயல்படுத்தியிருக்கும் எம்.எஸ்.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகத்தினருக்கும் மிக்க நன்றி.

மேலும், மாணவர்களுக்கு 15 நாள்கள் இங்கு பயிற்சி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு, அவர்கள் தங்கும் நாள்களுக்குத் தேவைப்படக்கூடிய உணவு உள்ளிட்ட அனைத்தும் இங்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர், மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களிலுள்ள பள்ளிக்கூடங்களைப் பராமரிப்பு செய்ய 1.9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார். மழையில் புத்தகங்கள் நனைந்துவிட்டன என்று சொன்னால் இன்றும், நாளையும் புத்தகங்கள் வழங்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. புத்தகங்கள் எப்போதும் இருப்பு வைத்திருக்கிறோம். அதனால், அந்தப் புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவிடும். அதனால்தான், இன்று நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வைக்கூட, வரும் 13-ம் தேதிக்கு மாற்றி வைத்திருக்கிறோம். மழை பெய்த நான்கு மாவட்டங்களிலுள்ள பள்ளிக்கூடங்களில் கட்டடங்கள் உறுதித் தன்மையுடன் இருக்கின்றனவா என்பதை அறிய, 20 வகையான அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறோம்.

பேட்டியளிக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ்

குறிப்பாக, ஊறிய சுவர்ப் பகுதியில் மாணவர்களை விடக்கூடாது, மின் இணைப்புகள் முறையாக இருக்கின்றனவா, பள்ளி வளாகத்திலுள்ள கிணறுகள் முறையாக இருக்கின்றனவா, போர்வெல் திறந்தவெளியில் இருக்கிறதா என்பதை முறையாகப் பார்க்க வேண்டும். அதேபோல், மழை பெய்து பள்ளி திறந்த பிறகு சில இடங்களில் தண்ணீர் தேங்கி, அதில் குப்பைகள் சூழ்ந்திருக்கின்றன. அதைக் கண்கூடாகப் பார்த்தோம், அதை அகற்ற அந்தந்தப் பகுதிகளிலுள்ள மாநகராட்சி உள்ளாட்சிப் பிரதிநிதிகளை அறிவுறுத்தியிருக்கிறோம். மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் 4,435 பள்ளிகளில் இன்னும் 32 பள்ளிகளில் பணி செய்ய வேண்டியிருக்கிறது. நான் பொறுப்பு அமைச்சராக இருந்த பகுதிகளிலுள்ள 77 பள்ளிகளிலும் தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறது.

இன்னும் ஆறு பள்ளிகளில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. அதில் தனி கவனம் செலுத்தி, உடனடியாகத் தண்ணீரை வடியச் செய்ய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியிருக்கிறோம். பாதுகாப்பாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டு, அங்கு மாணவர்கள் அமர்ந்து படிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பள்ளிகள் விடுமுறை விடும்போது, அதை ஈடுசெய்ய அடுத்தடுத்து வரக்கூடிய சனிக்கிழமைகளில் பள்ளிகளை வைத்துத்தான் அந்த விடுமுறையை ஈடு செய்வோம். ஆனால், தற்போது அரையாண்டு தேர்வு நடைபெறவிருப்பதால், அந்தத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வருகின்றனர்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.