இனி விசா தேவையில்லை… இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான் அரசு

தெஹ்ரான்,

மேற்காசிய நாடான ஈரானில் சுற்றுலா துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் அந்நாட்டு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டின் சுற்றுலாத்துறை மந்திரி எஸதுல்லாஹ் சர்காமி, ‘ஈரானின் சுற்றுலா துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்தார்.

சமீபத்தில், மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, கென்யா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இந்திய பயணிகளுக்கு விசா தேவையில்லை என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.