பசுக்களை பறிகொடுத்த இளைஞனுக்கு 5 லட்சம் வழங்கிய ஜெயராம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரளாவில் தொடுபுழா அருகில் உள்ள வெள்ளியமூட்டம் என்கிற பகுதியில் மேத்யூ பென்னி என்கிற 15 வயது சிறுவன் வளர்த்து வந்த 20 பசுக்களில் 13 பசுக்கள் விஷத்தன்மை வாய்ந்த செடிகளை தின்றதால் பரிதாபமாக இறந்தன. தனது தந்தையின் மறைவுக்கு பிறகு இந்த பசுக்களையே தங்களது குடும்பத்தின் வாழ்வாதாரமாக நினைத்து அவற்றை பராமரித்து வந்த மேத்யூவும் அவரது குடும்பத்தினரும் மிகப்பெரிய துயரத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் நடிகர் ஜெயராம் மேத்யூ வசிக்கும் இடத்திற்கே நேரடியாக சென்று அவருக்கு உதவி செய்யும் விதமாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை உதவித்தொகையாக வழங்கியுள்ளார்.

இதுகுறித்து ஜெயராம் கூறும்போது, “கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு இதேபோன்று தன்னுடைய 22 பசுக்கள் எதிர்பாராமல் இறந்த துயரத்தை நான் கண்கூடாக அனுபவித்தவன் என்பதால் மேத்யூவின் இந்த இழப்பு பற்றி என்னால் எளிதாக உணர முடிகிறது” என்று கூறியுள்ளார். மேலும் இதற்கு முன்னதாக இந்த செய்தியை கேள்விப்பட்டு மேத்யூவுக்கு ஒரு லட்சம் வழங்கிய மம்முட்டிக்கும் 2 லட்சம் வழங்கிய பிரித்விராஜுக்கும் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார் ஜெயராம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.