மக்களவை தேர்தல் குறித்து நாளை முதல் ஆந்திரா, தமிழகத்தில் தேர்தல் ஆணையர் ஆய்வு

புதுடெல்லி: மக்களவை தேர்தல் தயார்நிலை குறித்து ஆந்திரா மற்றும் தமிழகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நாளை முதல் ஆய்வு மேற்கொள்கிறார்.

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு தேர்தல் ஏற்பாடுகளுக்கான தயார் நிலை குறித்து அனைத்து மாநிலங்களிலும் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.

துணை தேர்தல் ஆணையர்கள் ஏற்கெனவே அனைத்து மாநிலங்களிலும், தேர்தல் தயார்நிலை குறித்து ஆய்வு செய்துவிட்டனர். அவர்கள் ஆந்திரா மற்றும் தமிழகத்தின் தயார் நிலை குறித்து தேர்தல்ஆணையத்திடம் இன்று சுருக்கமாக விளக்குவர். இதையடுத்து நாளை முதல் 10-ம் தேதி வரை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல் ஆகியோர் ஆந்திரா, தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்வர்.

அப்போது அரசியல் கட்சிகள், காவல் துறை, நிர்வாகத்துறை உயர் அதிகாரிகள், மாநில தேர்தல்அதிகாரிகள் ஆகியோரை சந்தித்துபேசுவர். அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு நடத்துவார்களா என்பது உறுதியாக தெரியவில்லை. சமீபத்தில் சட்டப்பேரவை நடைபெற்ற மாநிலங்களில் ஆய்வு மேற்கொள்வதை அவர்கள் தவிர்க்கலாம் என கூறப்படுகிறது.

கடந்த 2019-ம் ஆண்டில் மக்களவை தேர்தலுக்கான அறிவிப்புகள் மார்ச் 10-ம் தேதி அறிவிக்கப்பட்டன. தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதிமுதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றன. வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.