உக்ரைன் மீது இரவில் 40 ராக்கெட்டுகள் வீச்சு; ரஷியா அதிரடி தாக்குதல்

கீவ்,

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் படையெடுத்தது. உக்ரைனும் அதனை எதிர்கொண்டு போரில் ஈடுபட்டது. இந்த போரில் இரு நாடுகளை சேர்ந்த வீரர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

எனினும், போரானது 2-வது ஆண்டை நெருங்க உள்ளது. இந்த சூழலில், உக்ரைனின் வான் பாதுகாப்பு பகுதியை கைப்பற்றும் முயற்சியில் ரஷியா ஈடுபட்டு வருகிறது என்று கவலை தெரிவிக்கப்பட்டு வந்த சூழலில், ரஷியா இன்றிரவு அதிரடி தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.

இதன்படி, உக்ரைன் மீது ரஷியா 40 ராக்கெட்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. எனினும், அதில் 8 ராக்கெட்டுகளை எதிர்கொண்டு வீழ்த்தி விட்டோம் என்று உக்ரைன் விமான படை தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, உக்ரைனிடம் உள்ள விரிவான மின்னணு போர் உபகரணங்களால், ரஷியாவின் தாக்குதலுக்கான 20 வான் வழி ஆயுதங்கள் இலக்கை அடையவில்லை என்றும் தெரிவித்தது.

ரஷியாவின் இந்த தாக்குதலில், தொலைதூர, கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய, விமானம், விமானங்களை தாக்கி அழிக்க கூடிய ராக்கெட்டுகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு உள்ளன.

கடந்த 7-ந்தேதி நடந்த தாக்குதலின்போது, 59 ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டன. இதில், 18 ராக்கெட்டுகளையே உக்ரைன் சுட்டு வீழ்த்த முடிந்தது. டிசம்பர் 29-ந்தேதியில் இருந்து இதுபோன்ற தாக்குதல் 4-வது முறையாக நடத்தப்பட்டு உள்ளது என்று சி.என்.என். வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.