தெலுங்கானா கஞ்சா கடத்தல் மன்னன் கைது
ராமேஸ்வரம் : -தெலுங்கானா கஞ்சா கடத்தல் மன்னன் சாகம் மல்லா ரெட்டி 28, ராமேஸ்வரம் போலீசாரால் 11 மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ராமேஸ்வரம் கோயில் கார் பார்க்கிங் பகுதியில் 2023 பிப்.5ல் நிறுத்தப்பட்டிருந்த காரில் 150 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதில் தொடர்புடையவர்களை தேடினர்.
இது தொடர்பாக ராமேஸ்வரம் கோயில் ஊழியர் தனசேகரன், புதுரோடு முத்துக்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஜார்க்கண்ட் மாநில பதிவெண் கொண்ட கடத்தலுக்கு பயன்படுத்திய காரின் உரிமையாளர் சாகம் மல்லாரெட்டி 28, எனவும், இவர் தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டையை சேர்ந்தவர் எனத்தெரிந்தது.
இவர் தெலுங்கானாவில் கஞ்சா கடத்தல் மன்னனாக செயல்பட்டுள்ளார். ராமேஸ்வரம் எஸ்.ஐ., கோட்டைச்சாமி தலைமையில் போலீசார் அங்கு சென்று சாகம் மல்லாரெட்டியை கைது செய்தனர். சூர்யாபேட்டை நீதிமன்றம் அனுமதியுடன் அழைத்துவந்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.
துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.7.77 கோடி வைரங்கள்
பெங்களூரு : பெங்களூரு விமான நிலையத்திற்கு, துபாயில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் வைரம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், விமானத்தில் வந்திறங்கிய பயணியரை, வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது இரு பயணியரின் சூட்கேஸ்களில், சிறிய பைகளில் வைத்திருந்த வைரங்கள் சிக்கின.
அதை எடை பார்த்த போது 8,053 காரட் இருந்தது. அதன்மதிப்பு 7.77 கோடி ரூபாய். துபாயில் இருந்து கடத்தி வந்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர். அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4.62 லட்சம் ரூபாய், வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்கள் பெயர், விபரம் வெளியாகவில்லை.
இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை தொல்லை கொடுத்த வாலிபர் கைது
ஹாசன் : காதல் தொல்லையால், இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஹாசன் பேலுார் நிடுகுடு கிராமத்தில் வசிப்பவர் ஜெயண்ணா. இவரது மகள் சங்கீதா, 21. நிடுகுடு கிராமத்தைச் சேர்ந்த, ஹொன்னய்யா மகன் சிவா, 24. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக, சங்கீதாவை ஒருதலையாக காதலித்தார்.
சில தினங்களுக்கு முன்பு தனது காதலை, சங்கீதாவிடம் வெளிப்படுத்தினார். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனால், சங்கீதாவின் பெற்றோரை சந்தித்து, “உங்கள் மகளை எனக்கு, திருமணம் செய்து கொடுங்கள்,” என்று கேட்டு உள்ளார்.
இதற்கும் சங்கீதா பெற்றோர் மறுத்தனர். இதையடுத்து சங்கீதாவை தினமும் பின்தொடர்ந்து சென்று, தன்னை காதலிக்கும்படி தொல்லை கொடுத்துள்ளார்.
கடந்த 11ம் தேதி இரவு கோவிலுக்குச் சென்ற சங்கீதாவை வழிமறித்து, “என்னை காதலிக்கவில்லை என்றால், உன்னை கொன்று விடுவேன்,” என்றும் மிரட்டி உள்ளார்.
இதனால் மனம் உடைந்த சங்கீதா, நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சங்கீதாவின் பெற்றோர் அளித்த புகாரில், பேலுார் ரூரல் போலீசார் சிவாவை கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.
சிறையில் இருந்து தப்பிய கைதி கைது ஓடிய போது உடைந்தது கால்
கூடலுார் : நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் விஜயரத்தினம், 27. இவரை, 2017ல் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக, அனைத்து மகளிர் ஸ்டேஷன் போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக, ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், குற்றவாளி விஜயரத்தினத்துக்கு, 4 ஆண்டுகளுக்கு முன், 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த அக்., 29ம் தேதி சிறையில் இருந்து தப்பினார். கோவை காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தப்பிய கைதி, கூடலுாரில் பதுங்கி சிறுமியின் பெற்றோருக்கு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. தொடர்ந்து, கூடலுார் டி.எஸ்.பி., செல்வராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, எஸ்.எஸ்.ஐ., இப்ராஹிம் மற்றும் போலீசார் அவரை தொடர்ந்து தேடி வந்தனர்.
நேற்று முன்தினம், இரவு, 10:00 மணிக்கு அவர் முல்லை நகர் பகுதியில் இருப்பதை அறிந்த இரண்டு போலீசார் அவரை பிடித்தனர். அப்போது, அவர்களை தாக்கி விட்டு தப்பி ஓடி உள்ளான். அதில், தலைமை காவலர் முத்துமுருகன் காயமடைந்தார்.
போலீசார், விஜயரத்தினத்தை மீண்டும் தேடிப் பிடித்தனர். விஜயரத்தினம் தப்பி ஓடியபோது கிழே விழுந்ததில் இடது கால் உடைந்துள்ளது.
அவர், கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவக் கல்லுாரிக்கு கொண்டு செல்லப்பட்டார். கைதி தாக்கியதில் காயம் அடைந்த முத்துமுருகன் சிகிச்சைக்காக, கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்