பெங்களூரு : போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு, கே.இ.ஏ., எனும் கர்நாடக தேர்வு ஆணையம் வரும் 23ல், எழுத்துத் தேர்வை நடத்துகிறது. இதில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு உடைக் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கே.இ.ஏ., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கர்நாடகாவில் 545 போலீஸ் இன்ஸ்பெக்டர்களின் பணியிடங்களுக்கு, 23ல் எழுத்துத் தேர்வு நடக்கவுள்ளது. இதற்கு ஆஜராகும் ஆண்கள், பெண்கள் உடைக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும்.
ஆண்கள் முழுக்கை சட்டை அணிய அனுமதியில்லை. அரைக்கை சட்டையோ, காலர் இல்லாத சட்டையோ அணியலாம். பாக்கெட் இல்லாத அல்லது குறைந்த பாக்கெட்டுகள் உள்ள, சாதாரண பேன்ட் அணிய வேண்டும். குர்தா, பைஜாமா, ஜீன்ஸ் ஆகியவை அணிய அனுமதி இல்லை.
அணிந்துள்ள உடைகள், தெளிவானதாக இருக்க வேண்டும். ஜிப் பாக்கெட்டுகள், பெரிய பட்டன்கள், டிசைன் செய்யப்பட்ட துணியில் உடை அணிந்திருக்கக் கூடாது.
தேர்வு நடக்கும் ஹாலுக்குள் ஷூக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தெளிவான அடிபாகம் கொண்ட செருப்பு அணிய வேண்டும். கழுத்தில் உலோக நகை, மோதிரம், காப்புகள் அணியக் கூடாது.
தேர்வு எழுத வரும் பெண்கள், பூக்கள், புரோச்சுகள் அல்லது பட்டன்கள் கொண்டுள்ள உடைகளை அணிந்து வரக்கூடாது. முழுக்கை வைத்த உடை, ஜீன்ஸ் பேன்ட் அணிய கூடாது. ஹீல்ஸ் வைத்த, அடிப்பகுதி தடிமனாக உள்ள செருப்பு அல்லது ஷூக்களை தவிர்க்க வேண்டும்.
அடிபாகம் சிறிதான செருப்பு அணியலாம். தாலி, மெட்டியை தவிர வேறு எந்த விதமான உலோக நகைகளை அணிந்திருக்கக் கூடாது.
எலக்ட்ரானிக் பொருட்கள், மொபைல் போன், பென் டிரைவ், இயர் போன், மைக்ரோ போன், ப்ளூடூத், கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்களை, தேர்வு ஹாலுக்குள் கொண்டு செல்லக் கூடாது.
குடிநீர் பாட்டில், சிற்றுண்டி, தின்பண்டங்களை கொண்டு வருவது, தேர்வு ஹாலுக்குள் சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொப்பி, முக கவசம் அணிய கூடாது. இந்த விதிகளை பின்பற்றாதோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்