வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பீஜிங்: சீனாவில் தொடர்ந்து 2வது ஆண்டாக மக்கள் தொகை சரிவை சந்தித்துள்ளது. பிறப்பு விகிதம் குறைந்து, இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதால் அந்நாட்டு அரசு அதிர்ச்சியடைந்துள்ளது.
உலக மக்கள் தொகையில் முன்னணியில் இருந்துவந்த சீனா, கோவிட் தாக்கத்திற்கு பிறகு கடுமையான சரிவை சந்தித்தது. கோவிட் தொற்றால் லட்சக்கணக்கான மக்களை இழந்த சீனா, மக்கள் தொகையை பெருக்க பல்வேறு உத்திகளை கையாண்டது.
பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும் திட்டத்தை தளர்த்தி, தற்போது மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என அரசு அனுமதி அளித்தாலும், பிறப்பு விகிதம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை; மாறாக இறப்பு விகிதமே உயர்ந்தது.
60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2022ல் சீனாவில் மக்கள் தொகை சரிவை சந்தித்தது. வருடாவருடம் அதிகரிக்கும் மக்கள்தொகை, சுமார் 20 லட்சம் அளவிற்கு ஒரே ஆண்டில் குறைந்தது. 2023லும் இந்த சரிவு தொடர்ந்ததால் சீன அரசு அதிர்ச்சியடைந்துள்ளது. தற்போதைய சீன மக்கள் தொகை 140.9 கோடி என அந்நாட்டின் தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
இப்படியே பிறப்பு விகிதம் குறைந்துவந்தால், எதிர்காலத்தில் சீனாவில் வயதானவர்களே அதிகளவு இருப்பார்கள். இது அந்நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு பாதகமாக அமையலாம். எனவே, பிறப்பு விகிதத்தை அதிகரிக்க என்ன செய்யலாம் என சீன அரசு குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement