Doctor Vikatan: என் வயது 40 ஆகிறது. இரண்டு பிரசவங்களும் சிசேரியன். இரண்டாவது மகளுக்கு இப்போது நான்கு வயது ஆகிறது. கடந்த ஒன்றரை வருடங்களாக எனக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்த தையலில் ஓரிடத்தில் மட்டும் வலி இருந்து வந்தது. ஸ்கேன் செய்து பார்த்து போது அது ‘ஸ்கார் எண்டோமெட்ரியாசிஸ்’ (scar endometriosis) என்றும், அதற்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என்றும் கூறினார்கள். மாற்று மருத்துவத்தில் இதனை அறுவை சிகிச்சை இல்லாமல் சரி செய்ய முடியுமா?.
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

கர்ப்பப்பையின் உள்ளே இருக்கக்கூடிய எண்டோமெட்ரியல் கேவிட்டியில், சாதாரணமாக இருக்கக்கூடிய எண்டோமெட்ரியல் திசுவானது, அங்கே இல்லாமல் வேறிடங்களில் இருப்பதையே எண்டோமெட்ரியாசிஸ் என்கிறோம்.
இந்தத் திசுவானது சினைப்பையிலோ, இடுப்பெலும்புப் பகுதியிலோ, சிறுநீர்ப்பையிலோ, கர்ப்பப்பையின் மேல் பகுதியிலோ…. இப்படி எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.
நீங்கள் குறிப்பிட்டுள்ள ஸ்கார் எண்மோமெட்ரியாசிஸ் என்பது சிசேரியன் அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படுகிற அரிதான ஒரு நிகழ்வு.

இதில் ஸ்டேஜ் 1, 2, 3, 4 என பல நிலைகள் உள்ளன. அரிதான இந்த நிகழ்வு, 3 மற்றும் 4-வது நிலையில் இருக்கும்போது சித்த மருத்துவ சிகிச்சையில் ஓரளவு குணப்படுத்த முடியும். அதுவே ஒன்று மற்றும் இரண்டாவது நிலையில் குணப்படுத்துவது சிரமம்.
சிசேரியன் செய்த தழும்பில் ஏற்கெனவே ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். அதனால் சிகிச்சையை ஏற்கும் தன்மை மிகக் குறைவாக இருக்கும். எனவே 3 மற்றும் 4வது நிலைகளில் இருக்கும்போது ஆங்கில மருத்துவத்தை நாடி, அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காண்பதுதான் சரியாக இருக்கும்.

முதலில் நீங்கள் உங்களுடைய பிரச்னையின் தீவிரம் தெரிந்துகொள்ள வேண்டும். முறையான சித்த மருத்துவரை அணுகி, பாதிப்பு எந்த நிலையில் உள்ளது என்பதைக் கண்டறியுங்கள். ஆரம்பகட்டம் என்றால் பெரு மருந்துகள் கொடுத்து, கூடவே பத்தியங்களையும் அறிவுறுத்தி சிகிச்சை அளிப்பார். அடுத்தடுத்த கட்டம் என்றால் அவரே ஆங்கில மருத்துவரை அணுகும்படியும் அறிவுறுத்துவார்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.