செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்.15 வரை நீட்டித்து சென்னை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்.15-ம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அவரது நீதிமன்ற காவல் 19-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், வழக்கு ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதா? என்பதை விசாரணையில் தான் நிரூபிக்க முடியும் என முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறியது தவறு. சந்தர்ப்ப சூழ்நிலை மாறவில்லை என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் கூறிய நிலையில், ஆவணங்கள் திருத்தப்பட்டதே, சந்தர்ப்ப சூழ்நிலை மாற்றமாக கருதுவதாக மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.14-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன்மூலம் 19-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.