இலங்கையில் இருந்து மீனவர்களை மீட்க நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

இலங்கை வசம் உள்ள 77 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது 151 படகுகளை உடனடியாக விடுவிக்க தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இலங்கை கடற்படையினர் கடந்த 2023-ல் 243 தமிழக மீனவர்களை கைது செய்து, 37 படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 28 நாட்களில் மட்டும் 88 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 12 மீன்பிடி படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு மீன்பிடி படகுகளை நாட்டுடமையாக்க இலங்கை அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், 2018-ல் இலங்கை அரசால் கடல்சார் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தொடர்பாக, முன்பே நான் எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டி இருந்தேன். எனவே, பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுடமையாக்கப்பட்டுள்ள இந்திய மீன்பிடி படகுகளை திரும்ப பெறவும், படகுகளை உடனடியாக விடுவிக்கவும் ஏதுவாக, சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

இலங்கை வசம் உள்ள 77 மீனவர்கள் மற்றும் அவர்களது 151 படகுகளை உடனடியாக விடுவிக்க தேவையான அனைத்து தூதரக முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த ஜன.3-ம் தேதி பாகிஸ்தான் அதிகாரிகளால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், 2023 டிச.5-ம் தேதி குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 4 தமிழக மீனவர்களையும் விடுவிக்க, உரிய தூதரக வழிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.