‛ரோமியோ' எனக்கு திருப்புமுனையாக அமையும் : மிருணாளினி ரவி

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடித்துள்ள படம் 'ரோமியோ'. இவர்களுடன் யோகி பாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி மற்றும் பல திறமையான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி நடந்தது.

நாயகி மிருணாளினி ரவி பேசும்போது, “'ரோமியோ' படம் என் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். பட வாய்ப்பு என்பதை விட இதை பொறுப்பாகவே பார்க்கிறேன். மிருணாளினி என இயக்குநர் என்னைக் கூப்பிட்டதே இல்லை. லீலா என்று தான் கூப்பிடுவார். அந்த அளவுக்கு கதையோடு ஒன்றிவிட்டார். விஜய் ஆண்டனி சார் மல்டி டாஸ்கிங் நபர். பல விஷயங்கள் அவரைப் பார்த்து தான் கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தில் நான் முதல்முறையாக டப்பிங் செய்திருக்கிறேன்” என்றார்.

இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் கூறுகையில், “ஒரு கணவனாக காதலனாக ஒரு ஆணை பெண் எப்படி பார்க்க வேண்டும் என்பது தான் கதை. அதற்கான இன்ஸ்பிரேஷன் என் அம்மாதான். அவருக்கு நன்றி. லவ் ஸ்டோரி என முடிவு செய்ததும் எல்லாரும் நோ சொன்னார்கள். இது வழக்கமான காதல் கதை கிடையாது. வெற்றி பெற்ற மனிதன் தன் வாழ்வில் மிஸ் செய்யும் காதல் தான் 'ரோமியோ'. பல சர்ப்ரைஸான விஷயங்கள் கதையில் இருக்கிறது. தன் வாழ்வில் வரும் பெண்ணை எப்படி அணுக வேண்டும் என இதில் சொல்லி இருக்கிறோம்” என்றார்.

விஜய் ஆண்டனி கூறுகையில், “இந்த மேடையே சந்தோஷமாக உள்ளது. விநாயக் போன்ற திறமையான இயக்குநரை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி. முதன் முறையாக ஒரு காதல் படத்தில் நடித்துள்ளேன். ஒரு பெண் எப்படி ஆணை கொடுமைப்படுத்துகிறாள், ஆண் சமூகம் எப்படி இதை பொறுத்துக் கொள்கிறது என்பதுதான் கதை. குடும்பத்தோடு நிச்சயம் படத்தைப் பார்க்கலாம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.