புதுடெல்லி: அமலாக்கத் துறை அனுப்பிய சம்மன்களை அர்விந்த் கேஜ்ரிவால் தவிர்த்தது தொடர்பான வழக்கில் டெல்லி நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
டெல்லி மதுபான கொள்கைஊழல் வழக்கில் நேரில் ஆஜராகிவிளக்கம் அளிக்குமாறு டெல்லிமுதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால்இதனை கேஜ்ரிவால் ஏற்கவில்லை. கொள்கை உருவாக்கம் இறுதி செய்யப்படுவதற்கு முன் நடைபெற்ற கூட்டங்கள் மற்றும் லஞ்ச குற்றச்சாட்டுகள் குறித்து கேஜ்ரிவாலின் வாக்குமூலத்தை அமலாக்கத் துறை பதிவு செய்ய விரும்புகிறது.
ஆனால் இந்த சம்மன்கள் சட்டவிரோதம் எனவும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை எனவும் கேஜ்ரிவால் கூறிவருகிறார். அவர்விசாரணையை தவிர்ப்பது தொடர்பாக 2 புகார் மனுக்களை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது.
இவ்வழக்கில் கேஜ்ரிவால் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.அப்போது அமலாக்கத்துறை சம்மன்களை தவிர்ப்பது தொடர்பான வழக்கில் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிகூடுதல் முதன்மை பெருநகர மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா உத்தரவிட்டார். மேலும் புகார்கள் தொடர்பான ஆவணங்களை கேஜ்ரிவாலிடம் வழங்குமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டார்.
அமலாக்கத் துறை சம்மன்களை தவிர்ப்பது தொடர்பான வழக்கில் முதல்முறையாக கேஜ்ரிவால் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். முன்னதாக இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி டெல்லி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.