கேரள மாநிலம், கோழிக்கோட்டில் கடந்த 2018-ம் ஆண்டு நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. முதன்முதலில் நிபா பாதித்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மரணமடைந்தனர். இறந்தவர்களின் வீட்டு கிணற்றில் வெளவால்கள் கூட்டமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெளவால்கள் மூலம் பரவும் நிபா வைரஸ் மனிதர்களின் தொடர்பு மூலமும் பரவும். தொடர்ந்து நிபா பரவியதை அடுத்து அந்தக் காலகட்டத்தில் மொத்தம் 17 பேர் மரணமடைந்தனர்.
அதன்பிறகு, கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் இரண்டாவது முறையாகப் பரவியது. அப்போது 2 பேர் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், திருவனந்தபுரத்திலும் நிபா பாதிப்பு கண்டறியப்பட்டது. பின்னர், நிபா பாதித்து சிகிச்சையில் இருந்தவர்கள் நலமடைந்தனர்.
இந்நிலையில், மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டம்
இதுகுறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், “நிபா வைரஸ் பாதிப்பு குறித்து தெரிந்த உடனேயே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன. நிபா தடுப்பு நடவடிக்கைக்காக குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவனுக்கு கேரளாவில் நடத்திய பரிசோதனையில் ரிப்போர்ட் பாசிட்டிவ் ஆக வந்தது. அதை உறுதிப்படுத்த என்.ஐ.வி புனே-வுக்கு அனுப்பினோம். அங்கும் நிபா பாதித்தது உறுதி செயப்பட்டது.
2023-ம் ஆண்டு கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து, வெளிநாட்டில் இருந்து மோனோகுளோனைட் மருந்து வாங்கப்பட்டுள்ளது. அது, என்.ஐ.வி புனே-வில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த மருந்து கேரளாவுக்கு வந்து சேர்ந்துள்ளது.
நிபா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மஞ்சேரி மெடிக்கல் காலேஜில் 30 வார்டுகள் தனித்தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொருவொருக்கும் தனித்தனி அறைகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. ஏனென்றால், ஒரே வார்டாக ஏற்படுத்தப்பட்டால், முதலில் சிகிச்சைக்கு வந்து குணமடைந்தவருக்கு, புதிதாக வருபவர் மூலம் பரவ வாய்புள்ளது.
ஐ.சி.யூ வார்ட் வென்டிலேட்டர்கள் தயாராக உள்ளன. பாதிக்கப்பட்டவருடன் பிரைமரி கான்டாக்ட், செகண்டரி கான்டக்ட் மற்றும் ஹை ரிஸ்க் காக்டாக்ட் பற்றி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

நிபா பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு கடந்த 10-ம் தேதி அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. 11-ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் வந்ததும் சிறுவன் முதலில் ஒரு டாக்டரிடம் சென்றுள்ளார். அடுத்ததாக, தனியார் மருத்துவமனையில் வெளி நோயாளியாக சென்று மருந்து வாங்கியுள்ளார். பின்னர், அதே மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சையில் இருந்துள்ளார். அங்கிருந்து கோழிக்கோடு மெடிக்கல் காலேஜுக்கு வந்துள்ளார்.
சிறுவனுடன் ஹை ரிஸ்க் தொடர்பு, மற்றும் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சிறுவனுடன் தொடர்பில் இருந்ததாக முதற்கட்டமாக 214 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அதில் ஹை ரிஸ்க் பிரிவில் உள்ள 60 பேர் பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்படும்.
சிறுவனின் வீடு அமைந்துள்ளது பாண்டிக்காடு, மாணவன் படிக்கும் ஸ்கூல் ஆனக்கயத்தில் உள்ளது. சிறுவனின் வகுப்பறையில் இருந்த சக மாணவர்கள், அவர் சென்ற டியூஷனில் உள்ளவர்கள், அவர் சென்ற பஸ்ஸில் சென்றவர்கள் ஆகியோர் ஹை ரிஸ்க் கான்டாக்டில் வருகிறார்கள். இனி, ரூட் மேப் வெளியிடும்போது 60 என்ற ஹை ரிஸ்க் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ரூட் மேப் விரைவில் வெளியிடுவோம். அப்போது, அந்தப் பகுதிகளில் இருந்த அனைவரும் கன்ட்ரோல் ரூமை தொடர்புகொள்ள வேண்டும். 24 மணி நேரமும் செயல்படும் கன்ட்ரோல் ரூம் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 0483 2732010, 0483 2732050, 0483 2732060, 0483 2732090 ஆகிய எண்களுக்குத் தொடர்புகொள்ளலாம்.

கடந்த முறை நிபா வைரஸ் பாதிக்கப்பட்டபோது புனேவில் இருந்து மொபைல் லேப் கோழிக்கோட்டுக்கு வந்திருந்தது. அது போன்று இப்போதும் ஒரு மொபைல் லேப் கேட்டிருக்கிறோம். வெளவால்கள் மூலம் நிபா வைரஸ் பரவுகிறது. வெளவால்கள் சாப்பிட்ட பழங்கள் உள்ளிட்டவற்றால் அது பரவ வாய்ப்பு உள்ளது. காய்ச்சலுடன் தலைவலி, ஜன்னி, இருமல், மூச்சுத்திணறல் ஆகியவை நிபா வைரஸ் பரவலின் அறிகுறிகள். இதில் ஏதேனும் ஓர் அறிகுறியோ, ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகளோ தென்படலாம்.
மக்கள் பயப்பட வேண்டாம். அதே சமயம், விழிப்புடன் இருக்க வேண்டும். மலப்புறம் மாவட்டத்தில் உள்ள மக்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும்” என்றார்.