பெலகாவி,
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் மற்றும் கொடூரமான ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனது கணவரின் கொலையை வீடியோ காலில் பார்த்து ரசித்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெலகாவி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவனகவுடா பட்டீல் (வயது 43). இவரது மனைவி ஷைலா (38). ஷைலாவுக்கு பலோகி பகுதியை சேர்ந்த ருத்ரப்பா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவர் இடையேயும் கள்ளத்தொடர்பாக மாறியது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இருவரும் 2 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு, இதுபற்றி சிவனகவுடாவுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் மனைவி ஷைலா, ருத்ரப்பா ஆகியோரை கண்டித்துள்ளார். இருப்பினும் கள்ளக்காதலை இருவரும் கைவிடவில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த சூழலில் கடந்த 2-ந்தேதி ஷைலாவை அவரது சொந்த ஊரான காடிகொப்பா கிராமத்திற்கு அவரது கணவர் அழைத்து சென்றுள்ளார். பின்னர் தனது வீட்டுக்கு திரும்பி செல்லும் போது அவரை மர்மநபர் ஒருவர் கல்லை தலையில் போட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் ஷைலாவும் சம்பவ இடத்துக்கு வந்து சிவனகவுடாவின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் ஷைலாவின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரது செல்போன் அழைப்புகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் கொலை நடந்த போதும், அதற்கு பிறகும் ருத்ரப்பாவுடன் பேசியதும், கடந்த 2 ஆண்டாக அவர் ருத்ரப்பாவுடன் செல்போனில் பேசி வந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து ஷைலாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தது. அதன்படி சிவனகவுடாவை உயிருடன் விட்டால் நாம் சேர்ந்து வாழ முடியாது. எனவே சிவனகவுடாவை கொலை செய்யும்படி ருத்ரப்பாவிடம் ஷைலா கூறியுள்ளார். இதையடுத்து 2 பேரும் சேர்ந்து கொலை திட்டத்தை தீட்டியுள்ளனர். அந்த திட்டத்தின்படி ஷைலா தனது கணவரை மோட்டார் சைக்கிளில் தாய் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருந்து சிவனகவுடா பட்டீல் மட்டும் மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பும் வழியில் ருத்ரப்பா அவரை வழிமறித்து மது விருந்து கொடுத்துள்ளார்.
இதில் சிவனகவுடாபோதை தலைக்கு ஏறியதும் ருத்ரப்பா அவரது தலையில் பெரிய கல்லை எடுத்து போட்டுள்ளார். இதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சிவனகவுடா பட்டீல் இறந்து போய்விட்டார். இதையடுத்து ருத்ரப்பா அங்கிருந்து தப்பி ஓடியதும் தெரியவந்தது.
இந்நிலையில், ருத்ரப்பா, சிவனகவுடாவை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததை, தனது செல்போனில் வீடியோ காலில் ஷைலா பார்த்து ரசித்து மகிழ்ந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.