புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலால் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது. அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்து வருகிறது.
அதன் ஒரு கட்டமாக பாகிஸ்தான் எல்லைகளில் உள்ள பொதுமக்களை வேறு இடங்களுக்கு மாற்றியதாக தெரிகிறது. ஏனெனில், ஜம்மு காஷ்மீர் எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானின் எல்லையில் பல மசூதிகள் உள்ளன. அங்கு 5 வேளை தொழுகைக்கு முன்பு பாங்கு ஒலிக்கப்படும். அந்த ஒலி இந்திய எல்லைகளிலும் கேட்பதுண்டு.
அந்த பாங்கு ஒலியை காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள ராணுவத்தினரும் கேட்பதுண்டு. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்த பாங்கு ஒலிகள் கேட்பது இல்லை என இந்திய எல்லைகளில் இருந்து தகவல்கள் வருகின்றன. இதுபோன்ற சூழல், கார்கில் போரின் போதும் இருந்தது. கார்கில் போருக்கு பிறகு தற்போது மீண்டும் எல்லையின் பாகிஸ்தான் மசூதிகளில் பாங்கு ஒலி நிறுத்தப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவமும் பாதுகாப்புகளை பலப்படுத்தி இருப்பதாக தெரிகிறது. ஜம்முவின் ஆர்.எஸ்.புரா செக்டார் மற்றும் கார்கில் எல்லைப் பகுதிகளில் தற்போது அமைதி காணப்படுகிறது. ஆர்.எஸ்.புரா செக்டாருக்கு அப்பால் பாகிஸ்தானில் சியால்கோட் பகுதி உள்ளது. இங்குள்ள கஜ்ரியால், உன்ச்சி பெயின்ஸ், கெய்சரி, கூன்ஸ் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து பகல் நேரங்களில் கேட்கும் ஒலிகளும் தற்போது கேட்பதில்லை.
அதேபோல், எல்லைகளில் உள்ள வயல்வெளிகளில் பாகிஸ்தான் விவசாயிகள் வேலை செய்யும் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சிலர் கால்நடைகளை இந்திய எல்லைகளுக்கு மிக அருகில் மேய வைப்பது வழக்கம். அதையும் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு காண முடியவில்லை என இந்திய எல்லையோர கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.