Live Updates
-
11 May 2025 12:34 PM IST
ஏற்றுமதியில் தமிழ்நாடு இருமடங்கு சாதனை – அரசு பெருமிதம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொடர் முயற்சிகளால் 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.10,27,547 கோடி புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 32.23 இலட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு, தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது
திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதில் 2020-2021-ல் 26.15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்த ஏற்றுமதி 2024-2025-இல் 52.07 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருமடங்கு உயர்ந்து சாதனை படைத்தது.
மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் மராட்டியம், உத்தரப்பிரதேசம், கர்நாடகம், ஆகிய மாநிலங்களைவிட அதிகமாக 14.65 பில்லியன் டாலர் மதிப்புடைய மின்னணுப் பொருள்களை ஏற்றுமதி செய்து இந்தியாவில் முதலிடம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது தமிழ்நாடு.
-
11 May 2025 11:59 AM IST
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன்
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. பினாமி சொத்துகள் தடைச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை விசாரணை நடத்த நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
-
11 May 2025 11:55 AM IST
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தொடங்கியது
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா கம்பம் வழங்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது பாலம்மாள்புரத்தில் இருந்து வேப்பிலை, மஞ்சள் மற்றும் குங்குமத்தில் அலங்கரிக்கப்பட்ட கம்பம், 2 கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து வரப்பட்டு கோவில் அறங்காவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து கம்பம் நடும் விழாவுடன் வைகாசி பெருவிழா தொடங்கியது
-
11 May 2025 11:49 AM IST
பஹல்காம் தாக்குதலில் காயமடைந்த டாக்டர் பரமேஸ்வரனிடம் நலம் விசாரிப்பு
பஹல்காம் தாக்குதலில் காயமடைந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரனை சந்தித்து தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் நலம் விசாரித்தார். உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
-
11 May 2025 10:10 AM IST
மழைக்காலத்திற்கு முந்தைய விலங்குகள் கணக்கெடுப்பு பணி
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் ஆண்டுதோறும் கோடைகாலம் மற்றும் குளிர் காலத்தில் புலிகள் மற்றும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் மழைக்காலத்திற்கு முந்தைய விலங்குகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கி 17ம் தேதி வரை நடக்க உள்ள கணக்கெடுப்பில் 186 களப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
-
11 May 2025 10:02 AM IST
மதுரை வந்தார் கள்ளழகர்
சித்திரைத் திருவிழாவையொட்டி தங்க பல்லக்கில் பக்தர்கள் புடைசூழ அழகர் கோயிலில் இருந்து மதுரை வந்தார் கள்ளழகர். பொய்க்கரைப்பட்டி அப்பன் திருப்பதி கள்ளந்திரி கடச்சனேந்தல் வழியாக மதுரை மூன்றுமாவடி வந்த அழகரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு மண்டபங்களில் எழுந்தருள்கிறார். சிறப்பு பூஜைகளும் நடக்கின்றன.
-
11 May 2025 9:59 AM IST
காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்,
காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க பரிந்துரையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டதற்கு நன்றி எனவும் கூறியுள்ள டிரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த தலைமைகளை நினைத்து பெருமைப்படுகிறேன் எனவும் கூறியுள்ளார். இந்தியா, பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப் போவதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
-
11 May 2025 9:08 AM IST
ராணுவ வீரர்கள் குறித்து பேசியதற்கு அதிமுக முன்னாள் செல்லூர் ராஜு விளக்கம்
செல்லூர் ராஜு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“இன்று (அதாவது நேற்று) நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இரவு பகல் பார்க்காமல் நாட்டுக்காக பாடுபடும் நம்ம ராணுவ வீரர்களை மதிக்காமல் பேசியதாக வந்துள்ள செய்திகள் தவறு. ராணுவ வீரர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே பாராட்டியுள்ளார், எங்க குடும்பமே முன்னாள் ராணுவ வீரர்களை கொண்டது இன்று நேற்று நாளை எப்பொழுதும் மதிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
-
11 May 2025 9:05 AM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி, நீர் வரத்து விநாடிக்கு 876 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 108.19 அடியாகவும், நீர் இருப்பு 75.856 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.