கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து: ம.பி அமைச்சர் மீது வழக்குப் பதிய ஐகோர்ட் உத்தரவு

போபால்: கர்னல் சோபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் அமைச்சர் விஜய் ஷா மீது நான்கு மணி நேரத்துக்குள் வழக்குப் பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்னல் சோபியா குரேஷியை ‘பயங்கரவாதத்தின் சகோதரி’ என்று அவர் அழைத்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி அதுல் ஸ்ரீதரன், அமைச்சர் விஜய் ஷா மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 196 (குழுக்களுக்கு இடையே பகையை தூண்டுதல்) மற்றும் 152 (இந்திய இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்) போன்ற கடுமையான குற்றப் பிரிவுகளின் கீழ் நான்கு மணி நேரத்துக்குள் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று டிஐஜிக்கு உத்தரவிட்டார்.

செய்தி அறிக்கைகளை கவனத்தில் எடுத்துக்கொண்டதாக கூறிய நீதிபதி ஸ்ரீதரன், “‘பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் சகோதரி கர்னல் சோபியா குரேஷி’ என்ற அமைச்சரின் அறிக்கை, பிரிவினைவாத உணர்வுகளின் நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது. இதனால், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு ஆபத்து ஏற்படுகிறது என்பது முதல் பார்வையிலேயே தெரிகிறது. அமைச்சர் விஜய் ஷாவின் கருத்து மிகவும் ஆபத்தானது. இப்போது அவர்கள் இந்த நாட்டின் பாதுகாப்பு படைகளை நெருங்கியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பின்பு, முதல்வர் அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி கூறுகையில், “அமைச்சர் விஜய் ஷாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறு பற்றி மூத்த பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுடன் விவாதம் நடந்து வருகிறது” என்றார்.

மத்தியப் பிரதேசத்தின் பழங்குடிகள் நலம் மற்றும் போபால் எரிவாயு துயர நிவாரணம் மற்றும் மறுவாழ்வு துறையின் அமைச்சரான விஜய் ஷா தனது பேச்சால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர், பஹல்காம் தாக்குதல் பயங்கவாதிகளுடன் ராணுவ கர்னல் குரேஷியை தொடர்புபடுத்தியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

முன்னதாக, மே 12-ம் தேதி பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் விஜய் ஷா, “அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது சகோதரிகளின் சிந்தூரை அழித்தனர். அவர்களை அழிக்க நாம் அவர்களின் சகோதரியை அனுப்பி பழிவாங்கினோம். அவர்கள் (பயங்கராவாதிகள்) நமது இந்து சகோதரர்களைக் கொன்றனர். பிரதமர் மோடி, அவர்களின் (பயங்கரவாதிகளின்) சகோதரியை ராணுவ விமானத்தில் அனுப்பி அவர்களின் வீடுகளைத் தாக்கி பதிலடி கொடுத்தார். அவர்கள் (பயங்கரவாதிகள்) நமது சகோதரிகளை விதவைகளாக்கினர். பிரதமர் மோடி, அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த சகோதரியை அவர்களுக்கு பாடம் கற்பிக்க அனுப்பினார்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

தனது பேச்சில் ராணுவ கர்னல் குரேஷியின் பெயரை அமைச்சர் குறிப்பிடவில்லை என்றாலும், சர்ச்சை வெடித்த பின்பு கொடுத்த விளக்கங்களில் சோபியா குரேஷியின் பெயரைக் குறிப்பிட்டு, தனது அறிக்கை சிதைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். நாடு முழுவதிலும் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகள் அமைச்சர் விஜய் ஷாவின் கருத்துகளுக்காக அவரைச் சாடியுள்ளனர். மேலும், விஜய் ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.