கோவை: தென்மேற்கு பருவமழைக் காலம் அடுத்த சில தினங்களில் தொடங்க உள்ளது. மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் நிலை உள்ளதால், கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு அடுத்த இரு தினங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக பருவமழைக் காலங்களில் மாநகரில் சாலையோர தாழ்வான இடங்கள், ரயில்வே சுரங்கப் பாதைகளின் கீழ் புற வழித்தடங்கள், மேம்பால கீழ் வழித்தடங்கள் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது, மேற்கண்ட பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்கவும், தேங்கினாலும் விரைவாக நீரை வெளியேற்ற ஏதுவாக கூடுதல் மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளன.
கோவை மாநகரில் மழைநீர் தேங்கும் இடங்களான மேம்பாலங்களின் கீழ் பகுதிகள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட இடங்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் இன்று நேரில் ஆய்வு செய்தனர். மேலும், பருவமழைக் காலத்தையொட்டி, பொதுமக்கள் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க மாநகராட்சி சார்பில் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
மண்டலம் வாரியாக தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவசர கட்டுப்பாட்டு மைய எண் 0422-2302323, வாட்ஸ் அப் எண் : 81900-00200, வடக்கு மண்டலம் – 89259-75980, மேற்கு மண்டலம் – 89259-75981, மத்திய மண்டலம் – 89259-759822, தெற்கு மண்டலம் -90430-66114, கிழக்கு மண்டலம் – 89258-40945 ஆகிய தொடர்பு எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு மழை பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளிலும் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வால்பாறை நகராட்சியை 04253-222394, பொள்ளாச்சி – 04259-220999, மேட்டுப்பாளையம் 04254-222151, மதுக்கரை – 0422-2511815, கூடலூர் – 0422-2692402, கருமத்தம்பட்டி – 0421-2333070, காரமடை – 04254-272315 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். அதேபோல், மாவட்டத்தில் உள்ள 11 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு அவசர கால தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.