முதல்வன் படத்தில் அர்ஜுன் எப்படி ‘ஒரு நாள் முதல்வர்’ ஆவாரோ, அதேபோல, மத்திய அரசும் ‘ஒரு நாள் பதவி உயர்வு’ திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
என்ன திட்டம்?
நீண்ட காலமாக ஒரு துறையில் பணிபுரிந்து வருபவர், ஓய்வு பெறுகிறார் என்றால், அவருக்கு அந்நாளில் ‘ஒரு நாள் பதவி உயர்வு’ கிடைக்கும். இது குறித்துக் கடந்த 30-ம் தேதி உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

எல்லா துறைகளுக்குமா?
இந்தப் பதவி உயர்வு மத்திய அரசின் கீழ் இயங்கும் அனைத்து துறைகளுக்கும் அல்ல. மத்திய ஆயுத போலீஸ் படையில் (CAPF) நீண்ட காலமாகப் பணிபுரியும் கான்ஸ்டபிள் முதல் சப் இன்ஸ்பெக்டருக்கு வரை இந்தச் சலுகை வழங்கப்படுகிறது.
அஸ்ஸாம் ரைஃபிள்ஸில் ரைஃபிள்மேன் முதல் நைப் சுபேதார் வரையில் இந்தச் சலுகை கிடைக்கும். இது அவர்களைக் கௌரவிக்கும் விதமாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஆகும். ஆக, மத்திய ஆயுத போலீஸ் படை மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் இரண்டு துறைகளுக்கு மட்டுமே இந்தச் சலுகை.
இவர்கள் எந்தப் பதவியோடு ஓய்வு பெறுகிறார்களோ, அந்தப் பதவியின் அடுத்த பதவிக்கு ஒரு நாள் பதவி உயர்வு கிடைக்கும். அதுவும் அவர் பணிபுரியும் துறையின் கீழ் மட்டுமே கிடைக்கும்.
எதாவது சலுகை உண்டா?
இது முழுக்க முழுக்க கௌரவப் பதவி மட்டுமே. இதனால், ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்ட எந்தச் சலுகைகளும் கிடைக்காது.
அனைவருக்கும் கிடைக்குமா?
இந்தத் துறைகளில் இந்தப் பிரிவுகளில் பணிபுரியும் அனைவருக்கும் இந்தப் பதவி உயர்வு கிடைத்துவிடாது. கடந்த ஐந்து ஆண்டுக் கால அவர்களது ரிப்போர்ட் சரியாக இருக்க வேண்டும்.
அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில், பெரிய அளவில் எந்தத் தண்டனையும் பெற்றிருக்கக் கூடாது. ஒருவருக்கு இந்தப் பதவி உயர்வு கிடைக்கலாமா என்பதை அவரது கமாண்டிங் அதிகாரி தான் முடிவு செய்ய வேண்டும்.