கோப்பையை வென்ற பெங்களூரு… ஆனந்த கண்ணீர் விட்ட விராட் கோலி

அகமதாபாத்,

10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டிக்கான டாசில் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், கைல் ஜேமிசன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 191 ரன் எடுத்தால் சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்ற நிலையில் களம் புகுந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு திரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஷஷாங் சிங் 61 ரன்கள் எடுத்தார். ஆர்.சி.பி தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர், குருனால் பாண்ட்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இந்நிலையில், ஐ.பி.எல். தொடங்கியது முதல் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி இன்றைய ஆட்டத்தின் இறுதி ஓவரை ஹேசில்வுட் வீசிய போது (ஆர்.சி.பி வெற்றி பெறுவது உறுதியானதும்) ஆனந்த கண்ணீர் விட்டு அழுதார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.