சென்னை, புறநகரை குளிர்வித்த மழை

சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளை நேற்றிரவு குளிர்வித்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்தாலும், அடுத்தடுத்த நாளிலே வெயிலும் அதிகரிப்பதால் பொதுமக்கள் கடும் சிரமடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை வரையில் கூட கடும் வெயில் காணப்பட்டது. குறிப்பாக நேற்று மாலை 5.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 100 முதல் 102 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவானது. இதனால் நிலவிய வெப்பமும் மக்களை வாட்டி வதைத்தது.

இதற்கிடையே, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையமும் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக இரவு 7 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது.

தியாகராய நகர், வள்ளுவர்கோட்டம், பூந்தமல்லி, போரூர், மதுரவாயல், அம்பத்தூர், அயப்பாக்கம், முகப்பேர், வேப்பேரி, புரசைவாக்கம், வியாசர்பாடி, ஆவடி, பெரம்பூர் உட்பட சென்னையின் நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் இரவு குளிர்ச்சியான சூழல் நிலவியது. அதேநேரம், அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் மழை பெய்ததால் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலும், சாலையோரங்களில் மழை நீர் தேங்கிய சம்பவங்களும் அரங்கேறின.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.