மாஸ்கோ: ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல், செர்னோபில் மாதிரியான பேரழிவை ஏற்படுத்தும் என்று ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனம் எச்சரித்துள்ளது.
புஷேர் அணுமின் நிலையத்தை தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். ஆனால், அதன் பின்னர் ஓர் இஸ்ரேலிய ராணுவ அதிகாரி இந்த அறிக்கையை தவறானது என்று மறுத்தார். ஆனாலும், புஷேர் தளம் தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியாது என்று இஸ்ரேல் தரப்பு கூறியது. இந்தப் பின்னணியில்தான், ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல், செர்னோபில் மாதிரியான பேரழிவை ஏற்படுத்தும் என்று ரஷ்யாவின் அணுசக்தி நிறுவனம் எச்சரித்துள்ளது.
புஷேர் ஈரானில் இயங்கும் ஒரே அணுமின் நிலையம் ஆகும், இது ரஷ்யாவால் கட்டப்பட்டது. இன்று அதிகாலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், “இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி திறன்களை வலுக்கட்டாயமாக குறைக்க முயற்சித்தாலும், புஷேர் தளத்தில் அதிக அணுசக்தி வசதிகளை உருவாக்கும் மாஸ்கோவின் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று ரஷ்யாவுக்கு இஸ்ரேல் உறுதியளித்துள்ளது” என்றார்
மேலும், ரஷ்ய நிபுணர்கள் பணிபுரியும் ஈரானில் உள்ள புஷேர் அணுமின் நிலையம் மீதான வான்வழித் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலை ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியது.