சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தை சேர்ந்த சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ, முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், நீதிமன்றத்தில் ஆஜரான ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமை கைது செய்து விசாரிக்கவும், ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் உத்தரவிட்டார். அதன்படி, நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம், விசாரணைக்கு பிறகு மறுநாள் மாலை விடுவிக்கப்பட்டார். அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இதற்கிடையே, உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஜெயராம் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை கடந்த 18-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜெயராமை கைது செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், இடைநீக்க உத்தரவை திரும்ப பெறுவது தொடர்பாக தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்குமாறு அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உஜ்ஜல் புயான், மன்மோகன் அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இடைநீக்கத்தை ரத்து செய்ய மறுப்பு: தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் தவே, ‘‘சிறுவன் கடத்தல் தொடர்பான குற்ற வழக்கில் ஏடிஜிபி மீதான குற்றச்சாட்டு மற்றும் விசாரணை நிலுவையில் இருப்பதால், இடைநீக்கம் செய்த உத்தரவை தமிழக அரசு வாபஸ் பெறப்போவது இல்லை. விசாரணை முடியும் வரை இடைநீக்கம் தொடரும். (சில ஆவணங்களை தாக்கல் செய்தார்) சில நேரங்களில், இவ்வாறுதான் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் எங்களை கட்டாயப்படுத்துவது போல உள்ளது’’ என்றார்.
அதற்கு நீதிபதிகள், ‘‘சில நேரங்களில், வழக்கு விசாரணையின்போது உயர் நீதிமன்றங்கள் தங்கள் வரம்பை மீறி நிர்வாக முடிவுகளையும் எடுப்பது அதிருப்தி அளிக்கிறது’’ என்றனர். இந்த வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற முடியுமா என்பது குறித்து அரசின் விளக்கத்தை கேட்டு கூறுமாறு அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை சிறிது நேரம் தள்ளி வைத்தனர்.
சிபிசிஐடிக்கு மாற்றம்: மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஏடிஜிபி தரப்பில், ‘‘இது முறையான நடவடிக்கை அல்ல. எனவே, பணி இடைநீக்கத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘சிறுவன் கடத்தப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும். இந்த வழக்கில் ஏடிஜிபியை கைது செய்து விசாரி்க்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை ரத்து செய்கிறோம். இந்த வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றவும் தலைமை நீதிபதியை அறிவுறுத்துகிறோம்’’ என உத்தரவிட்டுள்ளனர்.