கேரளா, குஜராத், பஞ்சாப், மேற்கு வங்கம்: 4 மாநில இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது

புதுடெல்லி: கேரளா, குஜராத் பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. கேரள இடைத்தேர்தலில் அதிகபட்சமாக 73 சதவீத வாக்குகள் பதிவானது.

கேரளாவில் நிலம்பூர், மேற்கு வங்கத்தில் காலிகஞ்ச், பஞ்சாபில் மேற்கு லூதியானா, குஜராத்தில் விசாவதர், காடி ஆகிய 5 தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. நிலம்பூரில் சுயேச்சை எம்எல்ஏ பி.வி.அன்வர், விசாவதரில் ஆம் ஆத்மி எல்ஏ புபேந்திர பயானி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் அவசியமானது.

இதுபோல் காலிகஞ்ச் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ நசிருதீன் அகமது, மேற்கு லூதியானாவில் ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் பஸ்ஸி, காடி தொகுதியில் பாஜக எம்எல்ஏ கர்சன் சோலங்கி ஆகியோர் மறைவால் இடைத்தேர்தலுக்கான கட்டாயம் ஏற்பட்டது. இத்தொகுதிகளில் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. ஒருசில அசம்பாவிதங்கள் தவிர வாக்குப் பதிவு பெரும்பாலும் அமைதியாக நடைபெற்றது.

மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டம் காலிகஞ்ச் தொகுதியில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 69.85 சதவீத வாக்குகள் பதிவானது. இதுபோல கேரளாவின் நிலம்பூரில் 73.26 சதவீதமும், பஞ்சாப் மாநிலம் மேற்கு லூதியானாவில் 51.33 சதவீதமும், குஜராத் மாநிலம் காடியில் 64 சதவீதமும், விசாவதரில் 55 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

இத்தேர்தலில் முதல்முறையாக வாக்காளர்கள் தங்கள் மொபைல் போன்களை வாக்குச் சாவடிக்கு வெளியே பாதுகாப்பாக வைத்துவிட்டுச் செல்லும் வசதியை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. வரும் ஜூன் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.