ஆமீர் கான், ஜெனிலியா நடித்திருக்கிற ‘சித்தாரே ஜமீன் பர்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி ப்ரோமோஷனுக்காக பல்வேறு நேர்காணல்களில் ஆமீர் கானும், ஜெனிலியாவும் பங்கேற்று வருகின்றனர்.

அப்படி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஜெனிலியாவிடம் ‘தென்னிந்திய படங்களில் உங்களுக்கு வலுவான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லைதானே?’ எனக் கேள்வி எழுப்பினர். அதனை மறுத்து ஜெனிலியா கொடுத்தப் பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த நேர்காணலில் ஜெனிலியா, “நிச்சயமாக அப்படி கிடையாது. தென்னிந்தியப் படங்களில் எனக்கு எப்போதும் வலுவான நல்ல கதாபாத்திரங்களே கொடுக்கப்பட்டிருக்கின்றன. அங்கு எனக்கு அமைந்த வாய்ப்புகளுக்காக நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஹைதராபாத்தில் ஹாசினி என்றும், தமிழில் ஹரினி என்றும், மலையாளத்தில் ஆயிஷா என்றும் என்னுடைய கதாபாத்திரங்கள் வழியாகத் தான் என்னை தென்னிந்திய மக்கள் அடையாளப்படுத்தி நினைவில் வைத்திருக்கிறார்கள்.
நீங்கள் செய்யும் செயலை நேர்மையாக செய்யும்போது அது உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.

நான் நேர்மையாக ப்ரியத்துடன் என்னுடைய வேலைகளைச் செய்தேன். நான் ராஜமெளலி சாருடன் அங்கு பணிபுரிந்திருக்கிறேன். நான் அங்கு ஷங்கர் சாருடன் பணிபுரிந்திருக்கிறேன்.
சொல்லப்போனால், ஷங்கர் சாரின் படத்தின் மூலமாகத் தான் நான் தமிழில் அறிமுகம் செய்யப்பட்டேன். நான் அங்கு பெரிய நடிகர்களுடனும், இயக்குநர்களுடனும் பணிபுரிந்திருக்கிறேன்.” எனக் கூறினார்.