புதுடெல்லி: உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) டெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி, சிகிச்சை முடிவடைந்ததை அடுத்து இன்று வீடு திரும்பினார்.
காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்திக்கு வயிறு தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அஜய் ஸ்வரூப் கடந்த 16-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், “சோனியா காந்தி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயிறு தொடர்பான பிரச்சினைக்காக இரைப்பை குடல் நோய் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் இருந்து வருகிறார்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து 17-ம் தேதி மருத்துவர் அஜய் ஸ்வரூப் வெளியிட்ட அறிக்கையில், “அவர் உடல்நிலை நன்றாக உள்ளது. சிகிச்சைக்கு நல்ல முறையில் அவரது உடல் ஒத்துழைக்கிறது. வயிற்றுத் தொற்றிலிருந்து அவர் மீண்டு வருகிறார். அவரது உணவுமுறை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. மேலும் அவர் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்கிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவரது டிஸ்சார்ஜ் ஆகும் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எங்கள் மருத்துவர்கள் குழு, டாக்டர் எஸ்.நந்தி மற்றும் டாக்டர் அமிதாப் யாதவ் ஆகியோர் அவரது உடல்நலம் மற்றும் உணவை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், உடல்நலன் தேறிய சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆனார். சோனியா காந்தியின் மகன் ராகுல் காந்தி, மருத்துவமனைக்கு வந்து அவரை அழைத்துச் சென்றார்.