“விபத்துக்குள்ளான போயிங் 787 விமானம் நன்கு பராமரிக்கப்பட்டதே” – ஏர் இந்தியா சிஇஓ

புதுடெல்லி: விபத்துக்குள்ளான போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் நன்கு பராமரிக்கப்பட்டு, விமானம் மற்றும் என்ஜின்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும், புறப்படுவதற்கு முன்பு விமானத்தில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை என்றும் ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் கேம்பல் வில்சன் தெரிவித்துள்ளார்.

கடந்த 12-ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 242 பேரில், 241 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்து குறித்து சர்வதேச அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவன விமானங்களில் தொடர்ந்து பயணிக்கும் பயணிகளுக்கு கேம்பல் வில்சன் அனுப்பியுள்ள இமெயிலில், “விபத்துக்குள்ளான விமானம் நன்கு பராமரிக்கப்பட்டது. ஜூன் 2023-ல் விமானத்தில் மிகப் பெரிய சோதனை மேற்கொள்ளப்பட்டது. டிசம்பர் 2025-ல் அடுத்த சோதனை நடத்த திட்டமிடப்பட்டது. அதன் வலது இயந்திரம் மார்ச் 2025-இல் மாற்றியமைக்கப்பட்டது. இடது இயந்திரம் ஏப்ரல் 2025-இல் பரிசோதிக்கப்பட்டது.

சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) உத்தரவின்படி, விமான நிறுவனம் அதன் போயிங் 787 விமானங்களை முழுமையான பாதுகாப்பு ஆய்வுகளுக்கு உட்படுத்தி உள்ளது. 26 விமானங்களில் ஆய்வுகள் முடிக்கப்பட்டு, அவை சேவைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஏழு 787 விமானங்கள் தற்போது திட்டமிடப்பட்ட பராமரிப்பில் உள்ளன. சேவையில் விடப்படுவதற்கு முன்பு இந்த கூடுதல் சோதனைகள் செய்யப்படும்.

கடந்த ஆறு நாட்களில், ஏர் இந்தியா 83 விமானங்களை ரத்து செய்ய வேண்டியிருந்தது. இருப்பினும், நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கையாக, எங்கள் போயிங் 787 விமானக் குழுவிலும், கூடுதல் நடவடிக்கையாக, எங்கள் போயிங் 777 விமானங்களிலும், தற்போதைக்கு மேம்படுத்தப்பட்ட முன்-பயண பாதுகாப்பு சோதனைகளைத் தொடர நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

ஜூன் 20 முதல் ஜூலை நடுப்பகுதி வரை சர்வதேச விமானங்களை 15 சதவீதம் குறைக்கும் முடிவை ஏர் இந்தியா எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு, கூடுதல் கட்டணம் இல்லாமல் ஏர் இந்தியாவின் மற்றொரு விமானத்தில் மறு முன்பதிவு செய்யவோ அல்லது முழு பணத்தைத் திரும்பப் பெறவோ முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.