"ஈரானுக்கு எதிராக ராணுவ தாக்குதல்: 2 வாரங்களுக்குள் டிரம்ப் முடிவு செய்வார்.." – வெள்ளை மாளிகை

வாஷிங்டன்,

அணு ஆயுத உற்பத்தியை முன்வைத்து ஈரான் மீது கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு ஆயுத தளங்கள், ராணுவ நிலைகள் உள்பட மக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளால் தாக்கி வருகிறது.

இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. ஈரான் வீசிய பல ஏவுகணைகள், இஸ்ரேலின் பலத்த வான்பாதுகாப்பு அமைப்பான அயன் டோமையும் முறியடித்து அந்த நாட்டின் பல பகுதிகளில் பெருத்த சேதம் விளைவித்து வருகிறது.

மத்திய கிழக்கில் முக்கிய நாடுகளாக விளங்கி வரும் இந்த இரு நாடுகளுக்கு இடையே நடந்து வரும் இந்த ராணுவ நடவடிக்கையில் நூற்றுக்கணக்கானோர் உயிர்விட்டுள்ளனர்.

அந்தவகையில் ஈரானில் இதுவரை 639 பேர் கொல்லப்பட்டதாகவும், 1300-க்கு அதிகமானோர் காயமடைந்ததாகவும் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று கூறியுள்ளது. பலியானவர்களில் 263 பேர் பொதுமக்கள் என்றும் தெரியவருகிறது.

மறுபுறம் ஈரான் கொடுத்து வரும் பதிலடியில் இஸ்ரேலில் 24 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் அவதிப்பட்டு வருகின்றனர். உலகையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ள இந்த தாக்குதல்கள் 7-வது நாளாக நேற்றும் வீரியமாக நடந்தது.

இதில் முக்கியமாக இஸ்ரேலின் தெற்கே அமைந்துள்ள பீர்ஷெபா நகரில் உள்ள சொரோகா மருத்துவமனையில் நேற்று ஈரானின் ஏவுகணை ஒன்று தாக்கியது. இதில் ஆஸ்பத்திரி பலத்த சேதம் அடைந்தது. 240-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

1000-க்கு அதிகமான படுக்கைகளை கொண்ட மிகப்பெரிய இந்த ஆஸ்பத்திரி, தாக்குதலை தொடர்ந்து உடனடியாக மூடப்பட்டது. ஏவுகணை தாக்கியதால் எழுந்த கரும்புகை வானை முட்டியது.

காமெனி உயிரோடு இருக்கக்கூடாது – இஸ்ரேல் வெளியுறவு மந்திரி

வான் தாக்குதலுக்கான சைரன் ஒலிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த தாக்குதல் நடந்ததாகவும், இதில் ஆஸ்பத்திரியின் அறுவை சிகிச்சை கட்டிடம் மிகவும் சேதமடைந்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஆஸ்பத்திரி தாக்கப்பட்டதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதற்காக டெஹ்ரானின் கொடுங்கோலர்களிடம் இருந்து முழு விலையையும் வசூலிப்போம் என அவர் சூளுரைத்தார்.

இதைப்போல இந்த தாக்குதலுக்கு ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனியை குற்றம் சாட்டிய இஸ்ரேல் வெளியுறவு மந்திரி, அவர் உயிரோடு இருக்கக்கூடாது என கொக்கரித்துள்ளார். அது தொடர்பாக தங்கள் ராணுவத்துக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், இந்த இலக்கை எட்டுவதற்கான வழிகளை ராணுவம் அறிந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இஸ்ரேலின் ஏவுகணைகள்

மறுபுறம் ஈரானின் அராக் நகரில் உள்ள கனநீர் உலையை இஸ்ரேலின் ஏவுகணைகள் நேற்று பதம்பார்த்தன. நட்டான்ஸ் அருகே உள்ள மற்றொரு அணுசக்தி கட்டமைப்பையும் இஸ்ரேல் நேற்று தாக்கியது. அராக் கனநீர் உலை தாக்கப்பட்டதில் எந்தவித கதிர்வீச்சு அபாயமும் ஏற்படவில்லை என உள்ளூர் டி.வி. நிறுவனம் தெரிவித்தது. இதைப்போல உலையை சுற்றி வசித்து வரும் மக்களுக்கும் இந்த தாக்குதலில் எந்தவித சேதமும் இல்லை என்றும் கூறியது.

முன்னதாக இந்த உலையை தாக்க இருப்பதாகவும், எனவே அதை சுற்றியுள்ள மக்கள் வெளியேறுமாறும் இஸ்ரேல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கு இடையேயான இந்த மோதல் தொடர்பாக ஈரான் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி நிபந்தனையின்றி சரண் அடைய வலியுறுத்திய அவர், அவர் பதுங்கி இருக்கும் இடம் தெரியும் எனவும், எனினும் இப்போதைக்கு அவரை கொல்லும் திட்டம் இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

டிரம்பின் இந்த மிரட்டலுக்கு ஈரான் ஷியா பிரிவு உச்சபட்ச மதத்தலைவர் அயதுல்லா அலி அல்-சிஸ்டானி கடும் கண்டனம் தெரிவித்தார். ஈரானின் உச்சபட்ச தலைவர் அல்லது அரசியல் தலைமை மீது எந்தவித தாக்குதலும் நடந்தால், அது இந்த பிராந்தியத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகள் குறிப்பாக முஸ்லிம் நாடுகள் தூதரக அழுத்தம் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என அழைப்பு விடுத்து உள்ளார்.

இஸ்ரேல்-ஈரான் தாக்குதல்

இந்த நிலையில் கத்தாரின் தோஹாவில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் இருந்து விமானங்கள், டிரோன்களை அகற்றி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்கே எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் இதை உறுதி செய்துள்ளன. ஈரான் தாக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் அவை நகர்த்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதற்கிடையே இஸ்ரேல்-ஈரான் தாக்குதல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் இந்த நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்களை அந்தந்த நாடுகள் பத்திரமாக மீட்டு வருகின்றன.

குறிப்பாக ஜப்பான், சீனா, இந்தோனேஷியா, ஓமன் போன்ற நாடுகள் இஸ்ரேல் மற்றும் ஈரானில் வசிக்கும் தங்கள் நாட்டவர்களை தங்கள் தூதரகங்கள் மூலம் மீட்டு சிறப்பு விமானங்கள் மூலம் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பின.

இந்தசூழலில் ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகளை சந்தித்து பேசுவதற்காக ஈரான் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அரக்சி இன்று (வெள்ளிக்கிழமை) ஜெனீவா புறப்படுகிறார். எனினும் இந்த பேச்சுவார்த்தைகளில் தற்போதைக்கு பங்கேற்கும் திட்டம் எதுவும் இல்லை என அமெரிக்கா அறிவித்து உள்ளது.

உலக நாடுகளின் வேண்டுகோளை கண்டுகொள்ளாமல் இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவது மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை அதிகரித்து வருகிறது.

வெள்ளை மாளிகை

இந்நிலையில் ஈரானுக்கு எதிராக ராணுவத் தாக்குதலை நடத்துவதா.. வேண்டாமா என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவு எடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எதிர்காலத்தில் ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான கணிசமான வாய்ப்பு உள்ளது என்ற உண்மையின் அடிப்படையில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஈரானுக்கு செல்லலாமா வேண்டாமா என்பது முடிவு செய்யப்படும்.

ஈரானுடன் ஒரு ராஜதந்திர தீர்வுக்கு டிரம்ப் வழி திறந்திருந்தாலும், அவரது முக்கிய முன்னுரிமை அந்த நாடு அணு ஆயுதத்தைப் பெறுவதைத் தடுப்பதுதான். எந்தவொரு ஒப்பந்தமும் டெஹ்ரானால் யுரேனியம் செறிவூட்டலைத் தடை செய்ய வேண்டும் மற்றும் அணு ஆயுதங்களை உருவாக்கும் அதன் திறனைக் குறைக்க வேண்டும்.

ஜனாதிபதி டிரம்ப் எப்போதும் ராஜதந்திர தீர்வில் ஆர்வமாக உள்ளார்… அவர் ஒரு அமைதியை நிலைநாட்டுபவர். அவர் வலிமை மூலம் அமைதியை ஏற்படுத்துபவர்” என்று அவர் கூறினார்.

இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக வாஷிங்டனுக்கும், டெஹ்ரானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.