பேசின்பாலம் ரயில் நிலையத்தில் பார்க்கிங் ஒப்பந்தம் முடிந்தது: பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்த இடமில்லை

பேசின் பாலம் ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்த முடியாத நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது. அங்கு பராமரிப்பு ஒப்பந்தம்முடிந்ததால், பயணிகள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். இதற்கு விரைவில் தீர்வு காண கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை சென்ட்ரலை அடுத்து அமைந்துள்ள முக்கியமான நிலையம் பேசின்பாலம் ரயில் நிலையம். இந்த நிலையத்தில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி என இரு வழித்தடங்களாக ரயில்கள் பிரிந்து செல்லும். இங்குள்ள ரயில் நிலையத்தில் தினசரி 10,000-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.

இதில், 2,000-க்கும் மேற்பட்டோர் தங்கள் இருசக்கர வாகனங்களை நிலைய பார்க்கிங்-ல் நிறுத்திவிட்டு, ரயில்களில் பயணம் செய்வது வழக்கம். இந்த நிலையத்தில் இருந்த வாகன நிறுத்துமிடத்தை நிர்வகிக்கும் புதிய ஒப்பந்ததாரை தேர்வுசெய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், இந்த வாகன நிறுத்தப்பகுதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்ததால். வாகனங்களை நிறுத்த வழியின்றி பயணிகள் அவதிப்பட்டனர்.

இதற்கிடையில், பேசின்பாலம் ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தும் வசதியை செயல்படுத்த, ஒரு ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு, 4 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஆண்டு நவ.25-ம் தேதி கொடுக்கப்பட்டது. இதனால், இந்த ரயில் நிலையத்தில் பார்க்கிங் வசதியை பயன்படுத்தும் பயணிகள் அடைந்தனர். இந்நிலையில், பேசின்பாலம் ரயில் நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்தில் மீண்டும் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பேசின்பாலம் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை.

இங்கு உள்ளபார்க்கிங்-ல் பராமரிப்பு ஒப்பந்தம் கடந்த மாதம் 24-ம் தேதியுடன் முடிந்தது. இதையடுத்து, புதிய ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்படாததால், இந்நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், ரயில்வே தரப்பில் ஒரு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில், இங்கு வாகன நிறுத்துவதற்கான ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டதால், இங்கு வாகனத்தை நிறுத்துவது உரிமையாளரின் சொந்த பொறுப்பு. வாகனங்களின் பாதுகாப்புக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.

இது குறித்து பொன்னேரியை சேர்ந்த ரயில் பயணி பிரதாப் கூறியதாவது: நான் பொன்னேரியில் இருந்து பேசின்பாலம் ரயில் நிலையம் வந்து, அங்கு கட்டண பார்க்கிங்-ல் நிறுத்திய வாகனத்தை எடுத்துகொண்டு அலுவகத்துக்கு சென்று வருகிறேன். 4 ஆண்டுகள் தாமதத்துக்குபிறகு, கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் வாகன நிறுத்தமிட ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அந்த ஒப்பந்தம் ஆறு மாதத்தில் முடிந்தது வேதனை தருகிறது.

ஏனெனில், தற்போது பார்க்கிங் இடத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தினால், திருடு போகும் வாய்ப்பு உள்ளது. மேலும், ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி சென்றால், ஆர்.பி.எஃப் போலீஸார் பறிமுதல் செய்து, அபராதம் வசூலிக்கும் நிலை உள்ளது. எனவே, விரைவில் பார்க்கிங் வசதி பராமரிப்பு ஒப்பந்தம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்த நிலையத்தில் பார்க்கிங் ஒப்பந்தம் முடிந்துவிட்ட நிலையில், புதிய நபர்களை தேர்வு செய்து, ஒப்பந்தம் வழங்கப்படும். அதுவரை, சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் உள்ள இருசக்கர வாகன பார்க்கிங்கை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.