பாட்னா: முதியோர் பென்ஷன் தொகையை ரூ.400-லிருந்து, ரூ.1,100- ஆக உயர்த்தி முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்தது பற்றி ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
பிஹார் தேர்தலில் பாஜக-ஐக்கிய ஜனதா தளக் கூட்டணிக்கும், ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி உள்ளது. இந்நிலையில் தேஜஸ்வி யாதவ் நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், தற்போது சுயநினைவின்றி உள்ளார். செயல்படாத முதல்வராக இருக்கிறார். அவரால் அவரது கட்சி வேட்பாளர்களைக் கூட தேர்வு செய்ய முடியாத நிலையில் உள்ளார். அவருக்கு பதிலாக ஐக்கிய ஜனதா தள கட்சி வேட்பாளர்களைக் கூட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் தேர்வு செய்யப் போகிறார்.
பிஹாரில் மெகா கூட்டணி கூட்டணி ஆட்சியில் இருந்தபோது பென்ஷன் தொகை உயர்வு உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டு வந்தது. அந்தத் திட்டங்களை அப்படியே காப்பியடித்து தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அரசு செயல்பட்டு வருகிறது. நாங்கள் 7 மாதங்களுக்கு முன்பே கொடுத்த அறிவிப்புகளையெல்லாம், தாங்கள் கொண்டு வந்து செயல்படுத்துவது போல அவர்கள் செயல்படுகின்றனர். இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.