பிஹாரில் பிரம்மாண்டமான சீதை கோயில்: புதிய வடிவமைப்பை பார்வையிட்ட முதல்வர் நிதிஷ் குமார்

புதுடெல்லி: அயோத்தியைப் போல் பிஹாரின் சீதாமடியில் சீதைக்கு பிரம்மாண்டமாகக் கோயில் கட்டப்பட உள்ளது. இதன் புதிய வடிவமைப்பை முதல்வர் நிதிஷ்குமார் பார்வையிட்டுள்ளார்.

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசு ஆட்சியில் உள்ளது. இங்குள்ள சீதாமடியின் புனவுரா எனும் கிராமத்தில் சீதைக்காக ஒரு பழைய கோயில் உள்ளது. புனவுரா தாம் எனப்படும் இக்கோயில் உள்ள இடத்தில், சீதை பிறந்ததாகக் கருதப்படுகிறது. இந்த கோயிலின் மேம்பாட்டுக்காக கடந்த ஆண்டு நவம்பரில் பிஹார் அரசு சுமார் 50 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி ஒதுக்கியது.

இத்துடன் கோயில் புனரமைப்புக்காக முதல்கட்டமாக, ரூ.120 கோடி நிதியும் ஒதுக்கியது. இதற்கு புனவுரா தாம் கோயிலை, அயோத்தியின் ராமர் கோயிலைப் போல் பிரம்மாண்டமாகக் கட்ட முடிவு செய்திருப்பது காரணம். இதன் புதிய வடிவமைப்பின் படங்களை நேற்று முதல்வர் நிதிஷ்குமார் பார்வையிட்டார். இதைப் பாராட்டி அவர் அப்படங்களை தன் எக்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த பதிவில் முதல்வர் நிதிஷ் கூறுமையில், ‘அன்னை ஜானகியின் பிறப்பிடமான புனவுரா தாம் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தயாராக உள்ளது என்பதை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு அன்னை ஜானகியின் பிரம்மாண்டமான கோயிலைக் கட்டுவது பிஹார்வாசிகள் அனைவருக்கும் பெருமை மற்றும் நல்ல அதிர்ஷ்டம் அளிக்கும் விஷயம்.இந்த அன்னை சீதா கோயிலைக் கட்டுவதற்காக ஒரு அறக்கட்டளையும் அமைக்கப்பட்டுள்ளது.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதே கோயிலின் மீது, பிஹார் பாஜகவின் மூத்த தலைவரும் துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹா, ’சனாதன் கலாச்சாரப் பூமியில், பிரம்மாண்டமான ஜானகி கோயில் ஒரு புதிய படைப்பு ஆகும்.அன்னை ஜானகியின் புனித பிறப்பிடமான ஒரு தனித்துவமான மத, கலாச்சார மற்றும் ஆன்மீக மையமாக மேம்படுத்த வழி வகுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி உள்ளூர் வளர்ச்சியின் கண்ணோட்டத்தில் முக்கியமானது.

இது மட்டுமல்லாமல், சனாதன தர்மத்தின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை புதுப்பிப்பதற்கான வரலாற்று முன்முயற்சியும் கூட.’ எனத் தெரிவித்துள்ளார்.பிஹாரின் மற்றொரு துணை முதல்வரான பாஜக தலைவர் சாம்ராட் சவுத்ரி குறிப்பிடுகையில், ’பிரம்மாண்டமான ஜானகி கோயில் கட்டுவது ஒவ்வொரு சனாதனிக்கும் பெருமை மற்றும் நம்பிக்கையின் விஷயமாகும்.

நமது கலாச்சாரம், கண்ணியம் மற்றும் மதத்தின் விலைமதிப்பற்ற பாரம்பரியத்துடன் வரும் தலைமுறையினரை இணைக்க இந்த தாம் செயல்படும். கோயிலின் கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவேறும்.’ எனத் தெரிவித்துள்ளார்.அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கும் புனவுரா தாமின் சீதை கோயிலுக்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளதாகக் கருதப்படுகிறது. இக்கோயிலைச் சுற்றி சுற்றுலாப் பயணிகளுக்கான சிறந்த வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தற்போது, புனவுரா தாம் பிஹாரின் பல பெரிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது பாட்னா விமான நிலையத்திலிருந்து சுமார் 150 கி. மீட்டலிரும் முசாபர்பூர் ரயில் நிலையத்திலிருந்து 70 கி.மீட்டரிலும் உள்ளது.பிஹாரின் மிதிலாஞ்சல் எனப்படும் பகுதியில் அமைந்த சீதைக் கோயிலின் அருகில் தர்பங்கா, மதுபானி மாவட்டங்களும் உள்ளன. இந்த சீதைக்கான கோயில் வட மாநிலவாசிகள் இடையே மிகவும் முக்கியமானதாக உள்ளது.

தலபுராணம்: சீதை கோயிலின் தலபுராணப்படி, த்ரேதா யுகத்தின் போது, ஜனக்புரி நாட்டில் பெரும் வறட்சி நிலவி உள்ளது. இதற்காக, பண்டிதர்களின் யோசனைப்படி அந்நாட்டு மன்னர் ஜனக் நிலத்தில் இறங்கி வயலை உழுதிருக்கிறார்.

அன்னை சீதை: அப்போது அந்த நிலத்தில் அன்னை சீதை தோன்றியதாக இந்துக்களின் மதநம்பிக்கையில் உள்ளது. எனவே, இந்த கோயில் இந்துக்கள் இடையே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

தூர்தர்ஷன் தொடர்: இதை அயோத்தியின் ராமர்கோயிலைப் போல், நாடு முழுவதிலும் புகழ்பெற வைக்கும் முயற்சி தற்போது நடைபெறுகிறது. தூர்தர்ஷனில் தொலைக்காட்சி சீரியலாக வெளியானதை அடுத்து ராமாயணம் அதிகப் பிரபலமானது.

ராமர் கோயில்: தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் போராட்டத்தாலும் ராமரின் முக்கியத்துவம் தேசிய வளர்ந்தது. இதன் மீதான உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கால், அயோத்தி நிலப்பிரச்சினை முடிவாகி ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.

தேர்தல் பலன்: இந்நிலையில், ராமரை போல் அவரது மனைவியான சீதாவையும் புகழ்பெற வைக்கும் முயற்சி துவங்கியுள்ளது. இதன் மீதும் அயோத்தியைப் போல், அரசியல் கட்சிகள் தேர்தலின் போது பலன் அடைய முயலும் வாய்ப்புகள் தெரிகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.