4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்: குஜராத்தில் பாஜக, ஆம் ஆத்மி தலா ஒரு தொகுதியில் வெற்றி

புதுடெல்லி: கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் 3 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2 தொகுதிகளில் வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றன.

குஜராத், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

பிற்பகல் 2.20 மணி நிலவரப்படி, இரண்டு தொகுதிகளில் வெற்றி-தோல்விகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற 3 தொகுதிகளில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. குஜராத்தின் காடி தனித்தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராஜேந்திர குமார் 99,742 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரைவிட 39,452 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 60,290 வாக்குகளுடன் காங்கிரஸ் கட்சியின் ரமேஷ்பாய் சாவ்தா இரண்டாம் இடத்தையும், 3090 வாக்குளைப் பெற்று ஆம் ஆத்மி கட்சியின் சாவ்தா ஜகதீஷ்பாய் கன்பத்பாய் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

குஜராத்தின் மற்றொரு தொகுதியான விசாவதாரில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் இத்தாலியா கோபால், 75,942 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரைவிட 17,554 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் கிரித் படேல், 58,388 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இத்தொகுதியில் மூன்றாம் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் வேட்பாளர் நிதின் ரன்பாரியா 5501 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

தேர்தலின்போது, மெஹ்சானா மாவட்டத்தின் காடி தொகுதியில் 57.90 சதவீத வாக்குகளும், ஜூனகத் மாவட்டத்தில் அமைந்துள்ள விசாவதர் தொகுதியில் 56.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

கேரளாவின் நிலாம்பூர் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் அர்யாதன் சவுகத் 77,737 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். 19 சுற்றுக்கள் முடிவில், இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் ஸ்வராஜைவிட 11,077 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார். ஸ்வராஜ் 66,660 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் மோகன் ஜார்ஜ் 8,648 வாக்குகளுடன் 4-ம் இடம் பிடித்துள்ளார். அன்வர் என்ற சுயேட்சை வேட்பாளர் 19,760 வாக்குகளுடன் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி வேட்பாளர் சஞ்சீவ் அரோரா 35,179 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பரத் பூஷன் அஷூ 24,542 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மூன்றாம் இடம் பிடித்துள்ள பாஜக வேட்பாளர் ஜீவன் குப்தா 20,323 வாக்குகள் பெற்றுள்ளார்.

மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் இடைத்தேர்தலில் 16 சுற்றுக்களின் முடிவில், டி.எம்.சி வேட்பாளர் அலிஃபா அகமது 77,610 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 45,456 வாக்குகள் முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் ஆஷிஷ் கோஷ் 32,154 வாக்குகள் பெற்றுள்ளார். மூன்றாம் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் வேட்பாளர் கபில் உத்தின் ஷேக் 23,271 வாக்குகள் பெற்றுள்ளார்.

டி.எம்.சி வெற்றியை நோக்கி முன்னேறி வருவதால், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி காளிகஞ்ச் மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

“காளிகஞ்ச் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தி இந்தப் பகுதியில் உள்ள அனைத்து மதங்கள், சாதிகள், இனங்களைச் சேர்ந்த மக்களும் எங்களை மிகவும் ஆசீர்வதித்துள்ளனர். அவர்களுக்கு நான் பணிவுடன் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியின் முக்கிய சிற்பிகள் ‘மா, மதி மற்றும் மனுஷ்’. காளிகஞ்சைச் சேர்ந்த எனது சகாக்கள் இதற்காக அயராது உழைத்துள்ளனர். அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.